6 கோடி பார்ம் கொடுத்தும்.. திரும்பி வந்தது வெறும் 1.11 கோடிதான்.. தமிழ்நாட்டில் SIR-ல் ஏற்பட்ட அவலம்
சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (SIR) தீவிரமாக நடந்து வந்தாலும்.. இன்னும் பலர் நிரப்பிய ஆவணங்களை திருப்பி கொடுக்கவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. சுமார் 1.11 கோடி படிவங்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டு, டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன என்று புகார்கள் எழுந்துள்ளன.
ஏற்கனவே இந்த SIR பணிகளுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. இந்த வாக்காளர் திருத்தப் பணி லட்சக்கணக்கான உண்மையான வாக்காளர்களை நீக்கி, அவர்களின் வாக்களிக்கும் உரிமையைப் பாதிக்கும் என்று கூறி, திமுக உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
அதிமுகவோ, பாஜகவுடன் இணைந்து, இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இரட்டைப் பதிவுகளை நீக்க இந்த SIR பணி அவசியம் என்று வாதிடுகிறது. அதே சமயம் சில வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஒருதலைப்பட்சமாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆளுங்கட்சி ஊழியர்கள் சில பகுதிகளில் படிவங்களைக் கையாள்வதாகவும் அதிமுக புகார் தெரிவித்துள்ளது.
SIR பணிகள் தீவிரம்
நவம்பர் 4 அன்று தேர்தல் ஆணையம் SIR பணிகளைத் தொடங்கியது. 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆறு கோடிக்கும் அதிகமான கணக்கெடுப்புப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஆனால், 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டுப் பழைய வாக்காளர் பட்டியலில் பெயர்களைக் கண்டறிவதில் உள்ள சிரமங்களால், சுமார் 1.11 கோடி படிவங்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டு, டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான வாக்காளர்கள் 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டு பழைய வாக்காளர் பட்டியல்களில் தங்கள் பெயர்களை எளிதில் கண்டறிய முடியாததால், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான படிவங்களே திரும்பி வருகின்றன. அந்தப் பழைய பட்டியல்கள் கணினிமயமாக்கப்படாததால், அவற்றைச் சரிபார்க்க கைமுறையாகவே ஸ்க்ரோல் செய்ய வேண்டும்.
குறைந்த படிவங்கள் நிரம்பி உள்ளன
ஒரு பூத் வாக்காளர்கள் லிஸ்டை கொண்ட ஒரு PDF சுமார் ஆயிரம் பெயர்களைக் கொண்டிருப்பதால், வாக்காளர்கள் தங்கள் பெயர் அல்லது குடும்ப உறுப்பினரின் பெயர் உள்ளதா என்று ஒவ்வொரு பதிவையும் சரிபார்க்க வேண்டியுள்ளது. சரியான விவரங்களை பலர் கண்டுபிடிக்க முடியாமல், படிவங்களைச் சரியாக நிரப்ப முடியவில்லை.
இதன் காரணமாக, ஆறு கோடிக்கும் அதிகமான படிவங்கள் விநியோகிக்கப்பட்ட போதிலும், ஒரு கோடிக்கும் குறைவான பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களே டிஜிட்டல் மயமாக்கப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்துள்ளன. SIR பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடந்த நவம்பர் 11 அன்று மாநிலம் தழுவிய போராட்டங்களை நடத்தின.
நடவடிக்கை ரீதியான குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, கள அளவில் திருத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். கனமழை மற்றும் வரவிருக்கும் புயல் காரணமாக டிசம்பர் 4 ஆம் தேதிக்கு முன்னதாக வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி மந்தமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) அதிகப்படியான வேலைப்பளு, பயிற்சி இல்லாமை மற்றும் களச் செலவுகளுக்கான நிதி ஒதுக்கீடு இல்லாதது குறித்து தெரிவித்துள்ளனர். குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு SIR காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.












Click it and Unblock the Notifications