முழுசா வீடியோவை பார்த்துட்டு வாங்க.. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் வழக்கறிஞரிடம் நீதிபதி காட்டம்!
சென்னை: குஷ்பூ பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் திமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட அக்கட்சியின் முன்னாள் தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையில், நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஜூன் 16ஆம் தேதி கொடுங்கையூரில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இதுதொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, திமுகவில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், கூட்டத்தினரை கவர்வதற்காக நகைச்சுவையுடன் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், யாரையும் குறிப்பிட்டு தவறாக பேசவில்லை எனவும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய வீடியோவை தான் பார்த்ததாக கூறிய நீதிபதி, அதை முழுமையாக பார்த்துவிட்டு வரும்படி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார்.
மனுதாரர் 65 வயதான மூத்த குடிமகன் என்பதால் அவருடைய வயதை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஒரு மூத்த குடிமகன் இவ்வாறு பேசலாமா என்றும், மூத்த குடிமகன் போல் அவர் நடந்து கொள்ளவில்லையே என்றும் கூறி, வழக்கின் விசாரணையை நாளை மறு நாளுக்கு ஜூன் 30ஆம் தேதி) நீதிபதி தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications