ராமேஸ்வரத்தில் படகை திருடிய குடும்பம்.. கடலில் சிக்கியவர்களை விசாரித்தால் ட்விஸ்ட்
ராமேஸ்வரம்: இலங்கை யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்த ஜிம்ஸ்ரிவ் என்பவர் தனது மனைவி மகளுடன் இலங்கையில் இருந்து கடந்த 2023ம் ஆண்டு படகு மூலம் தனுஷ்கோடி வந்தனர். இவர்கள் மீண்டும் படகைத் திருடி இலங்கைக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டனர். இந்த விவகாரத்தில் பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இலங்கை யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்த 48 வயதாகும் ஜிம்ஸ்ரிவ் மற்றும் அவருடைய மனைவி ராஜினி (47), மகள் தீபேந்தினி (20). இவர்கள் 3 பேரும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகக் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் படகு மூலம் தனுஷ்கோடி வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்கினார்கள்.

இதனிடையே கள்ளத்தனமாகப் படகு மூலம் 3 பேரும் மீண்டும் இலங்கை செல்லத் திட்டமிட்டதாக சொல்லப்படுகிறது. அவர்களை இலங்கைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ராமேசுவரம் அருகே மண்டபம் ஏ.கே.எஸ். தோப்பு பகுதியைச் சேர்ந்த அகதி கண்ணன் (44), மண்டபத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்த தர்மபுரியைச் சேர்ந்த விஜய் (26) மற்றும் முனைக்காடு பகுதியைச் சேர்ந்த கோபி (28) ஆகிய 3 பேரும் ரூ.45 ஆயிரம் பெற்றுள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து ஜிம்ஸ்ரிவ், ராஜினி, தீபேந்தினி ஆகிய 3 பேரையும் மண்டபம் கடற்கரை பூங்கா அருகே உள்ள விநாயகர் கோவில் பகுதிக்கு வரவழைத்துள்ளார்கள். நேற்று முன்தினம் நள்ளிரவில், அங்கு நங்கூரமிட்டு நிறுத்தி இருந்த என்ஜின் பொருத்தப்பட்ட பைபர் படகைத் திருடி இவர்கள் 3 பேரையும் ஏற்றி இலங்கையில் இறக்கி விட்டு வர அவர்கள் திட்டமிட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.
அப்போது அங்கு வந்த ராமேஸ்வரம் போலீசார், இவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். விசாரணையில், அகதி கண்ணன் இலங்கையில் இருந்து கடந்த 2022-ம் ஆண்டு விமானம் மூலம் தமிழகம் வந்து விசா காலம் முடிந்தும் இலங்கை செல்லாமல் கள்ளத்தனமாக மண்டபம் ஏ.கே.எஸ்.தோப்பு பகுதியில் தங்கியதும் தெரியவந்தது.
கண்ணன், விஜய், கோபி ஆகிய 3 பேரும் பாம்பன் ரோடு பாலத்தில் நின்று தூண்டில் நரம்பு மூலம் மீன்பிடித்தவர்கள் என்பதும், அங்கு நின்றபடி தினமும் மண்டபம் கடற்கரை பூங்கா அருகே உள்ள கடல் பகுதியில் மீனவர் ஒருவர் நிறுத்திவிட்டுச் செல்லும் பைபர் படகைக் கண்காணித்து வந்ததும் தெரியவந்திருக்கிறது. அந்த படகைத் திருடிக்கொண்டு இலங்கைக்குச் செல்ல திட்டமிட்டதும் தெரியவந்திருக்கிறது. கைது செய்யப்பட்ட 6 பேரும் ராமேசுவரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications