6 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர்- இலங்கை சிறையில் தொடர்ந்து வாடும் ராமேஸ்வரம் மீனவர்கள்!
சென்னை: இலங்கையில் இருந்து 6 தமிழ்நாட்டு மீனவர்கள் சென்னை திரும்பியதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தமது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த 6 பேரும் ஏற்கனவே இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள். இலங்கை நீதிமன்றத்தால் அண்மையில் தண்டனை விதிக்கப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கை சிறையில் சித்ரவதையை அனுபவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்தாலும் எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்து சிறைகளில் அடைத்து வருகிறது. கடந்த சில மாதங்களாக நாகப்பட்டின, புதுக்கோட்டை, ராமேஸ்வரம் மீனவர்கள் பலரையும் இலங்கை கைது செய்துள்ளது.

அண்மையில் ராமேஸ்வரம் மீனவர்கள், படகோட்டிகள் என 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. இது ராமேஸ்வரம், புதுக்கோட்டையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். தங்கச்சிமடத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். மேலும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணமும் சென்றனர்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் மத்திய அரசுக்கு, மீனவர்கள் விடுதலை தொடர்பாக கடிதம் அனுப்பினார். அதில், தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண கூட்டு நடவடிக்கைக் குழுவை புதுப்பிக்க வேண்டும். இலங்கை சிறைகளில் உள்ள 77 மீனவர்கள் மற்றும் 151 படகுகளை உடனடியாக விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இலங்கைக்கான இந்திய தூதர் பேச்சுவார்த்தையும் நடத்தி இருந்தார்.
இந்த நிலையில் இலங்கையில் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டு இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்க 6 தமிழ்நாட்டு மீனவர்கள் இன்று சென்னை திரும்பினர். இவர்கள் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. ஆனால் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Returning home! Six Indian fishermen were repatriated from Sri Lanka to Chennai early this morning. pic.twitter.com/FSbnyT39ws
— India in Sri Lanka (@IndiainSL) February 27, 2024
தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய இலங்கைத் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் மத்திய அரசுக்கும் மிரட்டல் விடுத்துள்ளார். தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராக நடுக்கடலில் போராடுவேன் என எச்சரித்துள்ளார் டக்ளஸ் தேவானந்தா.












Click it and Unblock the Notifications