அண்ணாமலை மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கணும்! சமூக ஆர்வலர் புகார் மனு!
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் தேவராஜன் பரபரப்பு புகார் மனு அளித்துள்ளார்.
அண்ணாமலையின் பேச்சுக்கள் அனைத்தும் மக்களை பீதியடைய வைக்கும் வகையில் இருப்பதாகவும் தீய நோக்கத்தோடு மிகைப்படுத்தி பேசி வருவதாகவும் அவர் மீது சமூக ஆர்வலர் தேவராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், கோவை விவகாரத்தில் அரசுக்கும், காவல்துறைக்கும் அண்ணாமலை களங்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக மாநில தலைவர்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது பக்கம் பக்கமாக புகார் எழுதி அந்த புகார் மனுவை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வழங்கியிருக்கிறார் சமூக ஆர்வலர் தேவராஜன். கோவை கார் வெடிப்பு நிகழ்வு தொடர்பாக அண்ணாமலை தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாகவும் அவரது பேச்சுகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட வகையில் இருப்பதாகவும் புகார் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தீய நோக்கம்
அண்ணாமலை தீய நோக்கத்தோடு ஊடகங்களில் தேவையற்றதை பேசி வருவதாகவும் பொய் பிம்பத்தை உருவாக்க முயல்வதாகவும் சமூக ஆர்வலர் தேவராஜன் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பொதுமக்கள் மத்தியில் அண்ணாமலை ஒற்றுமையை சீர்குலைத்து பயத்தை உருவாக்கி வருவதாகவும் இதனால் அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார் சமூக ஆர்வலர் தேவராஜன்.

பரபரப்பு புகார்
அவதூறு பரப்புவதை தொடர்ந்து வாடிக்கையாக கொண்டு அண்ணாமலை செயல்படுவதாக கூறியுள்ள தேவராஜன், அவர் மீது பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என பரபரப்பு புகாரை அளித்திருக்கிறார். சென்னை செம்பியம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் தேவராஜன், சமூக செயற்பாடுகளில் மிகவும் ஆர்வமாக பங்கெடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உயர் அதிகரிகளுக்கு தகவல்
அண்ணாமலை மீதான பரபரப்பு புகார் தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக அதிகாரிகள் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்த புகார் மனு காரணமாக அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்யப்படுமா என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications