மாணவர்களை குற்றவாளி ஆக்காதீர்கள்.! அமைச்சரின் அறிவிப்பு தவறானது! கோரிக்கை விடுக்கும் சமூக ஆர்வலர்கள்
சென்னை : ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால் டிசியில் குறிப்பிடப்படும் என்ற அமைச்சரின் அறிவிப்பு தவறானது எனவும், மாணவர்கள் தவறு செய்தால் அதை சரி செய்வது தான் சரி எனவும், அதற்காக தண்டனை வழங்குவது சரியல்ல என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் அத்துமீறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வகுப்பறையில் மது அருந்துவது ஆசிரியர்களை மிரட்டுவது போன்ற சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் வெளியாகி பொதுமக்கள் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இலங்கை வன்முறை: கோத்தபாய, மகிந்த ராஜபக்சே வெளிநாடு தப்பி ஓட திட்டம்? தயார் நிலையில் 5 விமானங்கள்?
மாணவர்களை கட்டுப்படுத்தவும் அவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்த நிலையில் தமிழக சட்ட சபையில் நடைபெற்றுவரும் மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்
அமைச்சர் அறிவிப்பு
அதில், எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குறை கூறுவது தவறு. பள்ளிகள் - பெற்றோர்கள் - அரசு ஆகியோருக்கு கூட்டுப் பொறுப்பு உள்ளது. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், மாற்றுச் சான்றிதழ் , நடத்தை சான்றிதழில் என்ன காரணத்துக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பதைக் குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்." என கூறியிருந்தார்.
மாணவர்களை பாதிக்கும்
இதற்கு ஆசியர்கள் வரவேற்பு தெரிவித்து இருந்த போதிலும் மாணவர்கள் நலனை பாதிக்கும் என்ற கருத்தும் நிலவி வருகிறது. இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள சமூக ஆர்வலர் தேவநேயன், " தவறான அறிவிப்பு இது. மாணவர்கள் தவறு செய்தால் அதை சரி செய்வது தான் சரி. அதற்காக தண்டனை வழங்குவது சரியல்ல, இதனால் குழந்தைகள் இடைவிலகல் ஆவார்கள், இப்படி விலகலான குழந்தைகள்தான் பல்வேறு வன்முறைகளுக்கு ஆட்படுபவர்களாகவும் வன்முறையாளர்களாகவும் மாறுகிறார்கள். . இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் விளிம்பு நிலை குழந்தைகளே.
என்ன தண்டனை?
மேலும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பல்வேறு விதமான ஒழுங்கீனங்களில் ஈடுபடுகிறார்கள், அவர்கள் மீது என்ன தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது?. அவர்கள் அதே பள்ளியில் தொடரலாம், மாணவர்கள் மட்டும் தொடரக்கூடாது என்பது எப்படி சரியாகும். தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது பாலியல் வன்முறை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது அவர்கள் மீது முழுமையாக நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Recommended Video
மாணவர்களை நெறிப்படுத்துவோம்
பள்ளிகளில் ஆசிரியர்கள் பாலியல் வன்முறை செய்தால் அரசாணை எண் 121 , 2012 படி அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். மேலும் அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் கேன்சல் செய்யப்படும். இந்த அரசாணை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அரசு தெளிவுப்படுத்த வேண்டும். தயவு செய்து குழந்தைகளை குற்றவாளி ஆக்காதீர். நெறிப்படுத்துவோம். எனவே குழந்தைகளின் சிறந்த நலன் அடிப்படையில் இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டுகிறேன். நன்றி" என பதிவிட்டுள்ளார். இதே கோரிக்கையை தான் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.