விபத்து ரயிலில் வந்த தமிழக ராணுவ வீரர்.. பெட்டியில் 72 பேர்.. ஒரே ஆள்.. சல்யூட் அடிக்கும் பயணிகள்!
சென்னை : கொல்கத்தா ஷாலிமர் - சென்னை செண்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கிய நிலையில், அதில் பயணித்த ராணுவ வீரர்கள் பலர், மீட்பு பணிகளில் ஈடுபட்டதோடு பல பயணிகளை காப்பாற்றியுள்ளனர். உயிர் தப்பிய பலரும், ராணுவ வீரர்கள் செய்த உதவியைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளனர்.
கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா அருகே தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் சுமார் 280 பேர் உயிரிழந்திருப்பதோடு, காயமடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரயிலில் இருந்த பலரை, ரயிலில் பயணித்த ராணுவ வீரர்கள் காப்பாற்றியதாக விபத்தில் உயிர் தப்பிய பயணிகள் தெரிவித்துள்ளனர். உயிர் தப்பிய விக்னேஷ் என்ற பயணி, சென்னைக்கு விடுமுறைக்குச் செல்லும் ராணுவ வீரர்கள் இந்த ரயிலில் பயணித்தனர். அவர்கள் கடவுள் போல பெட்டிக்குள் சிக்கிக்கொண்ட பலரையும் மீட்டனர். பலருக்கு முதலுதவிகளையும் செய்தனர்" என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
அதேபோல, ஹரீஷ் என்ற பயணி, தாங்கள் இருந்த பெட்டியில் பயணித்த ராணுவ வீரர் ஒருவர் பெரிய அளவில் அனைவருக்கும் உதவி செய்ததாக நன்றி தெரிவித்துள்ளார். தங்கள் பெட்டிக்கு அருகே இருந்த பெட்டி முழுவதுமாக உருக்குலைந்து விட்டதாகவும், காலுக்கடியில் மூன்று சடலங்கள் கிடந்தது என்றும் தெரிவித்துள்ளார் அவர்.
சேலத்தைச் சேர்ந்த ஒரு பயணி கூறுகையில், நான் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தேன். திடீரென சத்தம் கேட்டது. கீழே விழுந்துவிட்டேன். இறங்கி பார்த்தபோது கடுமையான அதிர்ச்சியாக இருந்தது. கண் முன்னாடியே இறந்த உடல்களை சுமந்து சென்றனர். எங்களால் அதிர்ச்சியில் இருந்த மீள முடியவில்லை. ராணுவ வீரர் ஒருவர் எங்கள் கோச்சில் உள்ளவர்களை முடிந்தளவு காப்பாற்றினார் எனத் தெரிவித்தார்.
எல்லைப் பாதுகாப்பு படை வீரரான கனகராஜ் கூறுகையில், "எங்கள் பெட்டியில் 72 பேர் வந்தனர். ரயில் பாதி கவிழ்ந்து போய் நின்ற நிலையில், ஒரே பக்கம் எல்லோரும் சென்றால் பெட்டி கவிழ வாய்ப்புள்ளது என்பதால் ஒவ்வொருவராக மெதுவாக பேலன்ஸ் செய்து வெளியே கொண்டு வந்தோம். எல்லோரும் இறங்கிய பிறகு,குழந்தைகள் யாரும் உள்ளே இருக்கிறார்களா என நன்றாகத் தேடிப் பார்த்துவிட்டு கடைசியாக நான் வந்தேன்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications