பாளையத்தம்மா நீ பாசவிளக்கு! சசிகலா புரட்சிப் பயணத்தில் சாமியாடிய பெண்கள்! கையில் என்ன பார்த்தீங்களா?
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் என கூறிக் கொண்டு, அதிமுக கொடியுடன் சசிகலா இரண்டாவது கட்ட சுற்றுப்பயணத்தை நேற்று மேற்கொண்ட நிலையில், பூவிருந்தவல்லி தொகுதியில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், மேடையில் சாமி வேடமிட்டு ஆடிய கலைஞர்களால், அருள் வந்து கூட்டத்தில் இருந்த சில பெண்கள் அதிமுக கொடியுடன் சாமியாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுகவை பொருத்தவரை எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை சுற்றியே அரசியல் புள்ளி சுழன்று கொண்டிருக்கிறது ,
சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அதிமுக நிர்வாகிகள் கூறி வந்தாலும், எந்த ஒரு நிர்வாகியும் ஒருமுறை கூட அவரது பெயரை உச்சரிக்காமல் கடந்து சென்று விட முடியாது. அந்த அளவுக்கு தனது அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார் சசிகலா.
ஓபிஎஸ் vs எடப்பாடி vs சசிகலா.. மும்முனை தாக்குதலால் குலுங்கிய
அதிமுக விவகாரம்
இந்நிலையில் அதிமுகவில் இரட்டை தலைமையை ஒழித்து ஒற்றை தலைமையை கொண்டு வர வேண்டும் என்ற சர்ச்சை அதிகமாகி வரும் நிலையில், இது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா அணி ஓபிஎஸ் அணி என பிரிந்தது போல தற்போது அதிமுகவில் எடப்பாடி அணி ஓ.பன்னீர்செல்வம் அணி எனப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிக்கை, பேட்டி, பிரச்சனை, நீதிமன்ற நடவடிக்கை என அடுத்தடுத்து அதிரடி நிகழ்வுகளால் அதிமுக தொண்டர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.
சசிகலா பயணம்
இதனிடையே ஆட்டத்திற்கு நானும் வரலாமா என்பது போல திடீரென தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக ஜெயலலிதாவின் தோழியான சசிகலா அதிரடியாக அறிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கழகப் பொதுச் செயலாளரின் முகாம் அலுவலகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என குறிப்பிடப்பட்டுள்ளதோடு அதிமுக கொடி கட்டிய காரிலேயே சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழ் மண்ணின் உரிமைகளை காத்திடவும் பெண்ணினத்தின் பெருமைகளை பேணி காத்திடும் வகையில் புரட்சி பயணம் மேற்கொள்வதாக கடந்த 26 ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
2ஆம் கட்ட புரட்சிப் பயணம்
நேற்று இரண்டாவது கட்டமாக பயணம் மேற்கொண்ட அவர், சென்னை தியாகராய நகர் வீட்டிலிருந்து வழக்கம் போல் அதிமுக கொடி கட்டிய காரில் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து கத்திப்பாரா மேம்பாலம் வழியாக தாமரைப்பாக்கம், பாக்கம், பூவிருந்தவல்லி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அதிமுக கொடியே அவரை வரவேற்க பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் ஆங்காங்கே மேடைகள் அமைத்து சசிகலாவுக்கு பிரம்மாண்ட ஏற்பாடு அளிக்க அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
பிரம்மாண்ட ஏற்பாடுகள்
சசிகலாவிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக வழக்கம் போலவே பிரம்மாண்டமாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. வழிநெடுகிலும் கொடிகள், தோரணங்கள் என அமைக்கப்பட்டு இருந்ததோடு அவர் மக்களை சந்திக்கும் இடங்களில் ஏராளமான ஆட்களை அழைத்து வந்திருந்தனர் அவரது ஆதரவாளர்கள். மேலும் சசிகலா வரும் வரை தொண்டர்களை காக்க வைக்க கூடாது என்பதற்கான நடன நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதி தாமரைப்பாக்கம் கூட்ரோடு பகுதியில் சசிகலா வருகையை ஒட்டி தொண்டர்கள் காத்திருந்தனர்.
சாமியாடிய பெண்கள்
அப்போது அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக நடன நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேடையில் நடன கலைஞர் ஒருவர் சுவாமி வேடமிட்டு நடனமாட திடீரென கூட்டத்தில் இருந்த பெண்களுக்கு அருள் வந்து ஆக்ரோஷமாக ஆடத் தொடங்கினர். மேலும் அதிமுக கொடியை கையில் பிடித்துக் கொண்டு ஆக்ரோஷமாக நடனம் ஆடியதையடுத்து அங்கிருந்த பெண்கள் அவரை சமாதானம் செய்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.