வந்தே பாரத் சாம்பாரில் ‘வண்டு’.. உணவு பொட்டல சப்ளை கான்டிராக்டருக்கு அபராதம்! தெற்கு ரயில்வே ஆக்ஷன்
சென்னை: நேற்று நெல்லையில் இருந்து சென்னை வந்த வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் சாம்பாரில் வண்டுகள் இருந்ததாக புகார் எழுந்த நிலையில், உணவு பொட்டல விநியோக ஒப்பந்ததாரருக்கு ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது தெற்கு ரயில்வே. பயணிகளின் புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளது தெற்கு ரயில்வே.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய ஊர்களில் இருந்து வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கட்டணம் அதிகம் என்றாலும், விரைவாக பயணம் செய்ய முடியும் என்பதால் வந்தே பாரத் ரயில்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. வந்தே பாரத் ரயிலில் உணவுகள், காபி அல்லது டீ, தண்ணீர் பாட்டில், நியூஸ் பேப்பர் ஆகியவையும் வழங்கப்படுகிறது.

சென்னை எழும்பூர் - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில், மொத்தமுள்ள 650 கி.மீ தூரத்தை 7 மணி 50 நிமிடங்களில் சென்றடைகிறது. அந்தவகையில், திருநெல்வேலியில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு வந்தே பாரத் ரயில் சென்னைக்கு புறப்பட்டது. வந்தே பாரத் ரயில் பயணிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதில் சாம்பாரில் வண்டுகள் கிடந்ததாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். உணவில் வண்டுகள் கிடந்ததை அடுத்து, பயணிகள், ரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், அதற்கு ரயில்வே ஊழியர்கள் முறையாக விளக்கமளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சாம்பாரில் மிதப்பது வண்டு இல்லை, சீரகம் என முதலில் கூறியுள்ளனர். சீரகத்தில் எப்படி தலை, கால்கள் இருக்கும் என ரயில்வே அதிகாரிகளிடம் பயணிகள் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சாம்பாரில் வண்டுகள் கிடப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனர்.
வந்தே பாரத் ரயிலில் உணவிற்காக மட்டும் ரூ.200 வசூல் செய்கின்றனர். மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ரயிலில் வழங்கப்படும் உணவு, பயனுள்ளதாக இல்லை. தரமான உணவை வழங்க வேண்டும். இது குறித்து மத்திய அமைச்சகம் மற்றும் ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருகன் என்ற பயணி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயிலில், உணவுப் பொட்டலத்தில் வண்டு இருந்த விவகாரம் தொடர்பாக தென்னக ரயில்வே விரிவான விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும், உணவுப் பொட்டலம் விநியோகம் செய்த பிருந்தாவன் ஃபுட் ப்ராடக்ட் நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு நடத்தி, உணவின் மாதிரிகளைச் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பயணியின் புகாரைத் தொடர்ந்து உடனடியாக ரயிலிலிருந்து அனைத்து உணவு பொட்டலங்களும் ஆய்வு செய்யப்பட்டதுடன் ரயிலின் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கும் இடமும் ஆய்வு செய்யப்பட்டதில் எந்த குறைபாடும் இல்லை என்பது கண்டறியப்பட்டது.
குறிப்பாக, பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை உறுதி செய்வதில் ரயில்வே நிர்வாகம் உறுதியாக உள்ளது. ரயில்களில் வழங்கப்படும் உணவுகளின் தரத்தைத் தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் கண்காணித்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications