தென்மேற்குப் பருவமழை.. தமிழகத்தில் ஜில்லென்று தொடங்கியது..10 மாவட்டங்களில் மழை அடி தூள்
தென் தமிழகம் மற்றும் வட தமிழத்தின் உள் மாவட்டங்களின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திர காலம் முடிந்த பின்னரும் வெயில் பல மாவட்டங்களில் சுட்டெரித்து வருகிறது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் பல ஊர்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கேரளாவில் கடந்த ஞாயிறன்று தென்மேற்குப் பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் 10 செமீ மழை பதிவாகியுள்ளது. தேவாலா 8 செமீ, திருச்சி புள்ளம்பாடியில் 6 செமீ, தர்மபுரி , பெரியநாயக்கன்பாளையம், சேந்தமங்கலம்,திருச்சி டவுனில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

10 மாவட்டங்களில் கனமழை
இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

4 நாட்களுக்கு மிதமான மழை
ஜூன் 1 முதல் 4ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் 40 டிகிரி செல்சியல் வெயில் சுடும்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்றைய தினம் தென் கிழக்கு அரபிக்கடல், இலட்சத்தீவு, கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் - தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.மாலத்தீவு பகுதிகளில் பலத்தக்காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

பலத்த காற்று வீசும்
நாளைய தினம் தென் கிழக்கு அரபிக்கடல், இலட்சத்தீவு, கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் - தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரைக்கும் தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதிகளில் பலத்தக்காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications