எதிர்க்கட்சி துணை தலைவரின் இருக்கை மாறுகிறதா? .. ஓபிஎஸ்ஸை சபாநாயகர் எப்படி அழைத்தாருனு கேட்டீங்களா?
சென்னை: சட்டப்பேரவையில் ஓபிஎஸ்ஸை பேச அழைத்த சபாநாயகர் அவரை முன்னாள் முதல்வர் என குறிப்பிட்டு பேசினார். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பிரச்சினை எழுந்ததால் இரட்டை தலைமைகளாக இருந்த ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியும் பிரிந்துவிட்டனர். இருவரும் தனித்தனியே அதிமுகவுக்கு சொந்தம் கொண்டாடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் வைத்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டம் நடந்த அதே வேளையில் தலைமை கழகத்திற்கு சென்ற ஓபிஎஸ் அங்கிருந்த பொருட்களை சூறையாடியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

எடப்பாடி பழனிசாமி
இதை தடுக்க சென்ற எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுடன் மோதல் போக்கு ஏற்பட்ட போது அங்கு இரு தரப்பினரும் ரத்த காயமடைந்தனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸையும் அவருடைய ஆதரவாளர்களையும் கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார்.

ஓபிஎஸ்
ஒருங்கிணைப்பாளர் நான்தான் என கூறிய ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமியையும் அவருடைய ஆதரவாளர்களையும் கட்சியை விட்டு நீக்கினார். இப்படியாக நீக்குவதும் சேர்ப்பதுமாக இருந்த நிலையில் பொதுக் குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் நீதிமன்றத்தை நாடினார். இதனிடையே ஓபிஎஸ்ஸை அடிப்படை உறுப்பினர், பொருளாளர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டதால்,எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்படுவதாக எடப்பாடி அறிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர்
இதையடுத்து எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமார் தேர்வு செய்யப்பட்டதாக எடப்பாடி அறிவித்தார். இந்த நிலையில் இதற்கான கடிதமும் பேரவை தலைவர் அப்பாவுவிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து நடந்த சட்டசபை கூட்டத் தொடர்களில் எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கான இருக்கையை அப்பாவு மாற்றவில்லை.

எடப்பாடி பழனிசாமி
ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமியுடனேயே அமர்ந்திருந்தார். இது குறித்து சபாநாயகரிடம் எடப்பாடி பழனிசாமி முறையிட்ட போதெல்லாம் இட பிரச்சினை தீரவில்லை. இந்த நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் தொடர்பான வழக்குகளில் எடப்பாடி பழனிசாமி பக்கமே தீர்ப்புகள் வந்தன. உச்சநீதிமன்றத்தில் கூட அதிமுக பொதுக் குழு செல்லும் என தீர்ப்பு வந்தது. ஆனால் அந்த பொதுக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா செல்லாதா என்பதை சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொள்ள ஓபிஎஸ் தரப்பை அறிவுறுத்தியது.

ஓபிஎஸ்
இதை வைத்து எதிர்க்கட்சித் துணை தலைவருக்கான இடத்தில் அமர்ந்துள்ள ஓபிஎஸ்ஸை வேறு இடத்திற்கு மாற்றுமாறு அதிமுக கொறடா எஸ் பி வேலுமணி , சபாநாயகரிடம் முறையிட்டார். இந்த நிலையில் அதிமுக பொதுக் குழு தீர்மானங்கள் செல்லுமா செல்லாதா என்பது குறித்த வழக்கின் தீர்ப்பு உயர்நீதிமன்றத்தில் வந்தது. அதில் கூட எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும். அந்த ஜூலை 11 இல் பொதுக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என தீர்ப்பளித்தது.

ஓபிஎஸ்ஸுக்கு பெரும் பின்னடைவு
இது ஓபிஎஸ்ஸுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின் போதும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கான இருக்கை பிரச்சினை எதிரொலித்தது. ஆனால் சபாநாயகர் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் இன்றைய தினம் சட்டசபையில் நிலக்கரி சுரங்கத்திற்கு எதிரான கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இருக்கை மாறுகிறதா
அந்த தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசி வந்தனர். அப்போது சபாநாயகர் ஒவ்வொருவரையாக அழைத்த போது ஓபிஎஸ்ஸை திடீரென முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் என அழைத்தார். இதனால் ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்தது. எப்போதும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்றே ஓபிஎஸ்ஸை அழைத்து வந்த சபாநாயகர் இன்று திடீரென முன்னாள் முதல்வர் என அழைத்ததால் எடப்பாடி தரப்புக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. ஒரு வேளை ஓபிஎஸ்ஸின் இருக்கை மாற்றப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications