அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் பிரம்மாண்ட கட்சி எது? சபாநாயகர் அப்பாவு சொன்ன பதில்!
சென்னை: பிரம்மாண்டமான கட்சி ஒன்று, அதிமுகவுடன் கூட்டணிக்கு வரும் என எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், அது எந்தக் கட்சி என்ற கேள்விக்கு தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு பதில் அளித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு முனைப்பு காட்டி வருகிறது. அதிமுக - பாஜக கூட்டணியில் வேறு சில கட்சிகளும் இணைய உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வருகிறார்.

அண்மையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு அமைப்பது சரியாக இருக்கும். அடுத்து பாருங்கள்.. ஒரு பெரிய கட்சி எங்கள் கூட்டணிக்கு வரப்போகிறது.. பிரமாண்டமான கட்சி அதிமுக கூட்டணிக்கு வருகிறது. பொறுத்திருந்து பாருங்கள். நாங்கள் 234 தொகுதிகளில் 230 தொகுதிகளில் வெல்வோம். அதோடு தனித்து ஆட்சி அமைப்போம். எனக் கூறினார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பிரம்மாண்டமான கட்சி ஒன்று விரைவில் அதிமுகவுடன் கூட்டணிக்கு வரும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, "பிரம்மாண்டமான கட்சி அதிமுகவுடன் கூட்டணி சேருகிறது என்றால், அது சசிகலா, டிடிவி தினகரன் அல்லது ஓ.பன்னீர்செல்வமாகவே இருக்க முடியும்" என்றார்.
இவர்கள்தான் பிரமாண்டமான கட்சியா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "ஏன் அவர்கள் நடத்தும் கட்சிகள் உங்களுக்கு சிறிய கட்சிகளாக தெரிகிறதா?" என மறு கேள்வியெழுப்பிய அப்பாவு, "சசிகலா தான் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் அமர வைத்தார்" எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications