பொதுமக்கள் கொண்டாடும் 'சூப்பர் காப்' அம்பேத்கார்.. முதல்வர் கையால் விருது.. யார் இவர்?
சென்னை : சுதந்திர தின விழாவை ஒட்டி முதலமைச்சரின் காவல் பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சிஐடி சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அம்பேத்காரை பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். போலீஸ் அதிகாரியை பொதுமக்கள் பாராட்டுவதென்றால் சும்மாவா?
இவரை ஒரு ஊரில் இருந்து இடமாற்றம் செய்தபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்த ஊர் மக்கள் போராட்டம், கடை அடைப்பு போராட்டங்களில் ஈடுபட்டதே, மக்கள் இவர் மீது வைத்திருந்த நம்பிக்கைக்குச் சாட்சி.
நேர்மையான பணியாலும், சமூக விரோதிகளிடம் சம்பாதித்த பகையாலும், பல ஊர்களுக்கு, காவல்துறையின் பல பிரிவுகளுக்கு தூக்கி அடிக்கப்பட்டாலும், தீரத்தையும், துணிவையும் கேடயமாகக் கொண்டு பணியாற்றி, முதலமைச்சரின் காவல் பதக்கத்தைப் பெற இருக்கிறார் அம்பேத்கார்.
வறுமை ஒழிந்து வளமும் -அமைதியும் -ஒற்றுமையும் செழிக்கட்டும்! தமிமுன் அன்சாரி சுதந்திர தின வாழ்த்து!
முதலமைச்சர் பதக்கம்
சுதந்திர தின விழாவை ஒட்டி முதலமைச்சரின் காவல் பதக்கத்துக்கு மொத்தம் 15 காவல்துறை அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்க இருக்கிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2022-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்பட உள்ளது.
15 பேருக்கு
கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஐபிஎஸ், அகுற்றப்புலனாய்வுத் துறை தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் க.அம்பேத்கார், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் சு.சிவராமன், வை.பழனியாண்டி, மா.குமார் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றிய 10 காவல்துறை அதிகாரிகளுக்கும் முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
இன்ஸ்பெக்டர் அம்பேத்கார்
முதலமைச்சரின் காவல் பதக்கம் பெறும் காவல் ஆய்வாளர் அம்பேத்காரை அவர் தற்போது பணியாற்றி வரும் மற்றும் முன்னர் பணியாற்றிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். காரணம், இவர் பொதுமக்கள் கொண்டாடும் 'சூப்பர் காப்'. மக்கள் நலனில் தீவிர அக்கறை செலுத்தும் அம்பேத்காருக்கு முதலமைச்சரின் பதக்கம் பெறவிருப்பதை தாங்களே பெறுவதைப் போல, சமூக வலைதளங்களில் கொண்டாடித் தீர்க்கிறார்கள் இவரை அறிந்தவர்கள்.
பணியில் நேர்மை
விழுப்புரம் மாவட்டம் மற்றும் கடலூர் மாவட்டத்தின் புவனகிரி, சிதம்பரம், வடலூர், பண்ருட்டி என பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றியுள்ளார் காவல் ஆய்வாளர் அம்பேத்கார். பொதுமக்களுடன் நட்புறவு, சமூக விரோதிகளுக்கு வில்லன் இதுதான் அம்பேத்காரின் குணம். அரசியல் தூண்டுதல்கள் காரணமாக எந்த ஸ்டேஷனிலும் நீண்ட காலம் பணியாற்ற முடியாத அளவுக்கு நெருக்கடிகள். இதனால், காவல்துறையின் பல பிரிவுகளுக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார். நேர்மையான பணிக்காக ஆட்சியாளர்களின் மிரட்டல்களுக்கும், அதிகார துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாகியுள்ளார்.
ஊரே கடையடைப்பு
இவர் பணியமர்த்தப்படும் ஊர்களில் எல்லாம் சில காலங்களிலேயே ரௌடிகள் ராஜ்ஜியத்தை ஒடுக்கி, சட்டம் ஒழுங்கைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து காட்டியுள்ளார். பெண்கள், வயதானவர்கள் அளிக்கும் புகார்களுக்கு தனிக் கவனம் செலுத்தி சமூக விரோதிகளை ஒடுக்கியது இவரது சாதனை என்கிறார்கள் இவரை நன்கறிந்த பொதுமக்கள். இவரை ஒரு ஊரில் இருந்து இடமாற்றம் செய்தபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த ஊர்மக்கள், கடை அடைப்பு, போராட்டங்கள் என ஈடுபட்டதே, மக்கள் இவர் மீது வைத்திருந்த நம்பிக்கைக்குச் சாட்சி.
பொதுமக்களின் நம்பிக்கை
எந்தப் பணிக்குச் சென்றாலும், பொதுமக்களுடன் நட்பைப் பேணுவதையும், நம்பிக்கையைப் பெறுவதையும் கைவிட்டதே இல்லை. அதனால், மக்கள் தொடர்பே இல்லாத ரெக்கார்ட் பிரிவு, வயர்லெஸ் பிரிவு என அலுவலக பணிகளுக்கு தூக்கி அடிக்கப்பட்டாலும் துணிச்சலோடும், நேர்மையோடும் செயல்பட்டு வந்திருக்கிறார். தற்போது சிஐடி சிறப்பு பிரிவில் காவல் ஆய்வாளராக இருக்கும் அம்பேத்கார் நாளை சுதந்திர தின விழாவில் முதலமைச்சரின் பதக்கம் பெறவிருக்கிறார்.