சென்னை ஹைகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. மர்ம நபரை பிடிக்க டெல்லி விரைந்த தனிப்படை
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை பிடிக்க உயர்நீதிமன்ற பாதுகாப்பு காவல்துறை உதவி ஆணையர் விஜயராவலு தலைமையிலான தனிப்படை குழு டெல்லி விரைந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 30-ந்தேதி வெடிகுண்டு வெடிக்கும் என நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பனுக்கு கடந்த 16 ம் தேதி மிரட்டல் கடிதம் வந்தது.

அந்த கடிதத்தை டெல்லி, மோதிநகர், சுதர்சன் பூங்கா பகுதியை சேர்ந்த ஹர்தர்ஷன் சிங் நாக்பால் என்பவர் எழுதியிருந்தார். அதில், தன் மகனுடன் சேர்ந்து செப்டம்பர் 30 ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வெடிக்கச் செய்வோம் என கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து தலைமை பதிவாளர் குமரப்பன் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் உயர்நீதிமன்ற காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அனைத்து வாயில்களிலும் காவல்துறை பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது
நீதிபதிகள் தலைமையிலான உயர்நீதிமன்ற பாதுகாப்பு குழு கூட்டத்திற்கு பிறகு, வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினர் தங்களின் அடையாள அட்டைகளுடன் காவல்துறை சோதனைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது
இந்நிலையில், காவல்துறை ஆணையரின் உத்தரவின் படி உயர்நீதிமன்ற பாதுகாப்பு குழு உதவி ஆணையர் விஜயராவலு தலைமையில், உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேர் கொண்ட குழு வெடி குண்டு மிரட்டல் விடுத்த ஹர்தர்சன் சிங் நாக்பாலை கைது செய்ய டெல்லிக்கு விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications