ரெக்கார்ட் படைக்கும் வாய்ப்பு.. தமிழ்நாட்டில் இந்த முறை வாக்குப்பதிவு உயரப்போகிறது? என்ன காரணம்?
சென்னை: தமிழ்நாட்டில் நாளை (ஏப்ரல் 23, 2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு சதவீதம் முன்பை விடப் பெருமளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மிக முக்கியக் காரணமாக அமைவது தேர்தல் ஆணையம் மேற்கொண்ட SIR (Special Intensive Revision) எனப்படும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியாகும்.
தற்போது மக்கள் கூட்டம் கூட்டமாக வீடுகளுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். வாக்களிக்க வேண்டும் என்று பல லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். கடந்த தேர்தலில் 4 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

அதேபோல் இந்த முறையும் பல லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் வாகு எண்ணிக்கை மிக அதிக அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதை தாண்டி SIR நடவடிக்கைகள் காரணமாகவும் இந்த முறை வாக்கு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SIR நடவடிக்கை மூலம் பெயர்கள் நீக்கம்
இந்த நடவடிக்கையின் மூலம், நீண்டகாலமாகப் பட்டியலில் இருந்த ஆனால் வாக்களிக்க வராத 'இன்ஆக்டிவ்' வாக்காளர்கள், வெளியூர்களில் வசிப்பவர்கள் (Out of station) மற்றும் உயிரிழந்தவர்களின் பெயர்கள் களையப்பட்டுள்ளன.
சுமார் 74 லட்சம் தேவையற்ற பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதால், தற்போதுள்ள 5.67 கோடி வாக்காளர்களும் பெரும்பாலும் நேரடித் தொடர்பில் உள்ள மற்றும் வாக்களிக்கத் தயாராக இருப்பவர்களே. இதனால், மொத்த வாக்காளர் எண்ணிக்கை (Denominator) குறைந்துள்ள நிலையில், பதிவாகும் வாக்குகளின் விகிதம் கணித ரீதியாகவே 80 சதவீதத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த கால தேர்தல் தரவுகள் மற்றும் தற்போதைய மாற்றம்
கடந்த காலத் தேர்தல்களில் தமிழகத்தின் வாக்குப்பதிவு நிலவரத்தைக் கவனித்தால், 2021 சட்டமன்றத் தேர்தலில் 73.63 சதவீத வாக்குகளும், அதற்கு முன்னதாக 2016-ல் 74.26 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 78.12 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது இதுவரையிலான அதிகபட்சமாகக் கருதப்பட்டது.
அப்போதெல்லாம் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளும், போலிப் பெயர்களும் அதிகம் இருந்ததால், உண்மையான வாக்குப்பதிவு சதவீதம் குறைவாக தெரியும். ஆனால், இந்த ஆண்டு 'சார்' (SIR) தரவுகளின் அடிப்படையில் பட்டியல் களையப்பட்டு உள்ளதால், கடந்த தேர்தல்களை விட இந்த முறை வாக்குப்பதிவு சதவீதம் புதிய உச்சத்தைத் தொடும். குறிப்பாக 2021-ல் இருந்த 6.29 கோடி வாக்காளர்களில் பலர் செயல்படாத நிலையில் இருந்தனர்; ஆனால் இந்த முறை அத்தகைய தடைகள் நீக்கப்பட்டுள்ளன.
புதிய வாக்காளர்களின் பங்கும் விழிப்புணர்வும்
பட்டியல் திருத்தப் பணியில் பெயர்கள் நீக்கப்பட்டது ஒருபுறம் இருக்க, மறுபுறம் சுமார் 27.53 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 12.51 லட்சம் பேர் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட முதல்முறை வாக்காளர்கள் என்பது கூடுதல் பலம். இளம் தலைமுறையினரிடையே ஏற்பட்டுள்ள அரசியல் விழிப்புணர்வு மற்றும் தேர்தல் ஆணையத்தின் தொடர் பிரச்சாரங்கள் காரணமாக நகர்ப்புறங்களிலும் வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
போலி மற்றும் டூப்ளிகேட் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதால், கள்ள ஓட்டுகள் போடுவது தடுக்கப்பட்டு, ஜனநாயகத்தின் உண்மைத்தன்மை நிலைநாட்டப்படும். இந்த முறை பதிவாகும் ஒவ்வொரு வாக்கும் மாநிலத்தின் அரசியல் தலையெழுத்தை நிர்ணயிப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்பதில் ஐயமில்லை.












Click it and Unblock the Notifications