Exclusive: பெரும்பான்மை ஆள வேண்டும்... சிறுபான்மை வாழ வேண்டும்.. மனம் திறக்கும் பீட்டர் அல்போன்ஸ்..!
சென்னை: தமிழகத்தில் சமூக நீதியையும், மத நல்லிணக்கத்தையும் பேணிக் காப்பேன் என உறுதியளிக்கிறார் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்.
சிறுபான்மையினர் ஆணையம் மூலம் சிறுபான்மையின மக்கள் என்னவெல்லாம் பயன்பெற முடியும் என்பதை புத்தகமாகவே அச்சிட்டு வெளியிட உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழுக்கு அவர் அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு;
கேள்வி: தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக, உங்கள் செயல் திட்டம் என்ன..?
பதில்: தமிழக மக்கள் தொகையின் அடிப்படையில் பார்த்தால், மதச்சிறுபான்மையினர் -மொழிச் சிறுபான்மையினர் என இரண்டு பிரிவுகளிலும் 35% பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு இருக்கின்ற சமூக, பொருளாதார, வாழ்வியல் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்தவும், சிறுபான்மையின மக்களின் அமைதியான வாழ்வுக்கு இருக்கிற சவால்கள், நெருக்கடிகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் உழைப்பேன். இது தான் இந்த ஆணையத்தின் தலையாய பணி. சிறுபான்மையின மக்கள் அரசிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அரசும் சிறுபான்மையின மக்களுக்கு நிறைய செய்து வருகிறது. ஆனால் இந்த இரண்டுக்கும் இடையே சிறிய இடைவெளி உள்ளது. இந்த இடைவெளியை முதலமைச்சரின் நல்லெண்ண தூதுவராக இருந்து சிறுபான்மையின மக்களின் எதிர்பார்பார்ப்புகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பேன்.
கேள்வி: இதுவரை இந்த ஆணையம் சம்பிரதாய ஆணையமாக கருதப்பட்ட நிலையில் உங்கள் வருகை என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்..?
பதில்: சிறுபான்மையினர் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்களா என்பதை பொறுத்து தான் ஜனநாயகத்தின் தரமே அளவிடப்படுகிறது. சிறுபான்மையின மக்கள் எங்கு மகிழ்ச்சியாக மனநிறைவாக வாழ்கிறார்களோ அங்கு தான் உண்மையான ஜனநாயகம் இருக்கிறது. இது தான் ஜனநாயக வெற்றிக்கே அடையாளம். என்னை பொறுத்தவரை பெரும்பான்மை ஆள வேண்டும், சிறுபான்மை மாண்புடன் வாழ வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் சமூக நீதியையும், மத நல்லிணக்கத்தையும் பேணிக் காக்கும் வகையில் எனது செயல்பாடுகள் அமையும்.
கேள்வி: சிறுபான்மையினர் ஆணையம் மூலம் சிறுபான்மையின மக்கள் என்னவெல்லாம் பயனடைய முடியும்..?
பதில்: தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்னும் பொறுப்பேற்கவில்லை. ஒரு வாரத்தில் இது குறித்து ஆணையத்தின் செயலாளருடன் ஆலோசனை நடத்தி சிறுபான்மையின மக்களுக்கு நாம் என்னவெல்லாம் செய்யலாம், யாரெல்லாம் பயன்பெறமுடியும், நிதி ஒதுக்கீடு என்ன என்பது பற்றிய முழு விவரத்தையும் வெளிப்படையாக புத்தகமாகவே வெளியிடும் திட்டத்தில் இருக்கிறேன்.
கேள்வி: முதலமைச்சரை சந்திக்கும் போது அவர் உங்களிடம் என்ன கூறினார்..?
பதில்: அரசு மீது மக்கள் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்றும் அந்த நம்பிக்கையை பார்க்கும் போது தனக்கு அச்சமாக உள்ளதென்றும் கூறினார். மக்களின் நம்பிக்கை காப்பாற்றுவதற்காக இன்னும் அதிகம் உழைக்க வேண்டும் என தாம் விரும்புவதாகவும் அதற்கு அரசின் அங்கமாக உள்ள எங்களை போன்றோர் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கேள்வி: சிறுபான்மையின மக்களுக்கு நீங்கள் கூற விரும்புவது..?
பதில்: சிறுபான்மையினர் தங்களை தனித் தீவுகளாக ஆக்கிக்கொள்ளக் கூடாது. பெரும்பான்மை மக்களோடு இணக்கமாகவும் உறவாகவும் வாழவேண்டும். மத அடையாளங்கள் நம்முடைய தனிப்பட்ட அடையாளங்களே தவிர ஒட்டுமொத்த சமூகத்தின் அடையாளமாக அது இருக்க கூடாது.
கேள்வி: சிறுபான்மையினர் ஆணையத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு மாவட்டந்தோறும் பயணம் செய்வீர்களா?
பதில்: நிச்சயமாக, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று ஆய்வு செய்யவிருக்கிறேன். இன்னும் ஆணையத்தின் உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை. அந்த நியமனம் முடிந்தபிறகு பயணத்தை தொடங்கவிருக்கிறேன். சிறுபான்மை மக்களின் குறைகளை, தேவைகளை, எதிர்பார்ப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்து பூர்த்தி செய்ய இருக்கிறேன்.












Click it and Unblock the Notifications