பயணிகளின் கனிவான கவனத்திற்கு! கிறிஸ்துமஸுக்கு ஊருக்கு போறீங்களா? உங்களுக்காக சிறப்பு கட்டண ரயில்கள்!
சென்னை : கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி நாகர்கோவில் பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இதனை விடுமுறைக்காக சொந்த ஊர் செல்லும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ மக்களின் மிகவும் விருப்பத்திற்குரிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பெருவிழாவானது வருகின்ற 25ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது இதனால் தலைநகரான சென்னையில் இருந்து தங்கள் ஊர்களுக்கு செல்ல தற்போது பலரும் தீவிரம் முயற்சி எடுத்து வருகின்றனர்.
ஏற்கனவே பெரும்பாலான ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தனியார் மற்றும் அரசு பேருந்து சேவையை நம்பி மக்கள் இருக்கிறார்கள். ஆனால் ரயில் சேவையை பயன்படுத்தவே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர்.
ஒரு ரயில் டிக்கெட்டின் விலை 19 லட்சமா? அப்படி என்னதான் இருக்கு.. வாய் பிளந்த நெட்டிசன்கள்
கிறிஸ்துமஸ் பண்டிகை
அதிக டிக்கெட் கட்டணம் மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக பெரும்பாலானோர் ரயில் பயணத்தையே விரும்பி வரும் நிலையில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி நாகர்கோவில் பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
சிறப்பு கட்டண ரயில்
அதன்படி தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் (06021) தாம்பரத்திலிருந்து டிசம்பர் 22 வியாழக்கிழமை அன்று இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரயில் (06022) டிசம்பர் 23 வெள்ளிக்கிழமை அன்று மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.
என்னென்ன வசதிகள்
இந்த ரயில்கள் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியுடன் கூடிய ஒரு சரக்கு பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
23ஆம் தேதியில் சிறப்பு ரயில்
மேலும் தாம்பரம் - நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு கட்டண ரயில் (06041) தாம்பரத்தில் இருந்து டிசம்பர் 23 வெள்ளிக்கிமை அன்று இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.10 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் 2 குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியுடன் கூடிய ஒரு சரக்கு பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.