ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி.. நாளை சொர்க்கவாசல் திறப்பு.. பக்தர்களுக்கு தெற்கு ரயில்வே குட் நியூஸ்
சென்னை: வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக ஸ்ரீரங்கத்தில் கூடுதல் ரயில்கள் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஸ்ரீரங்கம்: 108 வைணவ திவ்ய தேசங்களில் முதல் திவ்ய தேசமாகவும், பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படுவது திருச்சி - ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் மார்கழி மாதத்தில் 20 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு வாய்ந்தது.

பகல்பத்து திருவிழா: பொதுவாக பெருமாள் கோவில்கள் அனைத்திலும் வைகுண்ட ஏகாதசி நாளன்று அதிகாலையில் சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடக்கும். ஆனால் ஸ்ரீரங்கத்தில் இவ்விழாவில் 20 நாள் விழாவாக நடத்தப்படும். வைகுண்ட ஏகாதசிக்கு முன்புள்ள 10 நாட்கள் பகல் பத்து என்றும், வைகுண்ட ஏகாதசிக்கு பிறகு வரும் 10 நாட்கள் இராபத்து என்றும் அழைப்படுகிறது.
டிசம்பர் 23: இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 12ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. இன்றைய தினம் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளுகிறார். டிசம்பர் 23 அன்று வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற இருக்கிறது.
பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு தமிழக முழுவதிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இதன் காரணமாக பயணிகளின் வசதிக்காக ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்கள் நின்று செல்லும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி ரயில்கள்: ஸ்ரீரங்கத்தில் நிற்கும் ரயில்கள்: டிசம்பர் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து மாலை 05.20 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (12633), கன்னியாகுமரியில் இருந்து மாலை 05.50 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (12634) ஆகியவை ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.
சென்னையில் இருந்து மாலை 05.00 மணிக்கு புறப்படும் செங்கோட்டை வழி கொல்லம் எக்ஸ்பிரஸ் (16101), கொல்லத்தில் இருந்து மதியம் 12.00 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16102) ஆகியவை டிசம்பர் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் (முறையே இரவு 09.20 மணி மற்றும் இரவு 09.38 மணி) நின்று செல்லும்.
மேல்மருவத்தூர்: தைப்பூச இருமுடி திருவிழாவை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னை-திருநெல்வேலி சென்னை வாராந்திர ரயில் மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, மானாமதுரை வழியாக இயக்கப்படும் சென்னை - திருநெல்வேலி வாராந்திர ரயில் (06069) டிசம்பர் 22 முதல் ஜனவரி 19 வரையும், திருநெல்வேலி - சென்னை வாராந்திர ரயில் (06070) டிசம்பர் 28 முதல் ஜனவரி 18 வரையும் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக ஒரு நிமிடம் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications