பாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க? திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்
சென்னை: 10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்ச்சி முறை குறித்தோ அல்லது மீண்டும் அவர்களுக்கு எப்போது தேர்வு என்பது குறித்தோ தமிழக அரசு ஒரு அறிவிப்பும் வெளியிடாததால் அவர்கள் தவித்து போயுள்ளனர்.
தமிழகத்தில் மார்ச் 27-ந் தேதி முதல் ஏப்ரல் 23-ந் தேதி வரை 10-ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 9.55 லட்சம் மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வு எழுத தயாராக இருந்தனர். இதேபோல் தனித்தேர்வர்களும் தேர்வுக்கு தயாராக இருந்தனர்.
ஆனால் கொரோனா பரவலைத் தொடர்ந்து லாக்டவுன் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதனால் 10-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறுமா? இல்லையா? என்கிற குழப்பம் தொடர்ந்து இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இல்லை என்றும், அனைவரும் தேர்ச்சி பெற்றனர் என்றும் அறிவிக்கப்பட்டனர்.

10-ம் வகுப்பில் 100% தேர்ச்சி
மேலும் காலாண்டு, அரையாண்டுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் (80%), வருகைப் பதிவேடு (20%) ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் இன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் 100% தேர்ச்சி என அறிவிக்கப்பட்டனர்.

தனித்தேர்வர்கள் குழப்பம்
அதேநேரத்தில் 10-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் நிலை என்ன என்பதுதான் தெரியவில்லை. பிற மாணவர்களைப் போல தனித்தேர்வர்களும் தேர்ச்சி பெற்றுவிட்டனர் எனவும் அறிவிக்கவும் இல்லை. அவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு எப்போது நடக்கும் என்பதும் தெரிவிக்கப்படவும் இல்லை.

தனித்தேர்வர்களுக்கு உதவி
தனித்தேர்வர்கள் என்ற பட்டியலில் சுமார் 33,000 பேர் உள்ளனர். இவர்களில் 23,000 பேர் கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள். எஞ்சிய 10,000 பேரும் ஏதோ ஒரு காரணத்துக்காக 10-ம் வகுப்பு தேர்வு எழுதாதவர்கள்; அல்லது 10-ம் வகுப்பு படிக்க முடியாதவர்கள். தற்போது 10-ம் வகுப்பு தனித்தேர்வு எழுதி பாஸ் ஆவது என்பது அவர்களது வாழ்க்கையில் பெரும் உதவி செய்யக் கூடிய ஒன்றாக இருக்கும்.

அலட்சியம் கூடாது
இந்த நிலையில் 10-ம் வகுப்பு தனித்தேர்வர்களை அலட்சியப்படுத்தும் வகையில் அவர்களை கண்டுகொள்ளாமல் அரசு இருப்பது எந்தவிதத்திலும் ஏற்புடையதே இல்லை. அவர்களுக்கான ஒரு தெளிவான முடிவை அரசு தெரிவிக்க வேண்டியது அதன் கடமை. அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப் போகிறார்களா? அல்லது மீண்டும் ஒரு தேர்வுதான் எனில் அது எப்போதுதான் நடக்கும் என்பதையும் தெளிவாக உடனே அரசு அறிவிக்க வேண்டும் என்பதுதான் தனித்தேர்வர்களின் எதிர்பார்பு.












Click it and Unblock the Notifications