புதுமுகங்களுக்கு ‘ஜாக்பாட்’.. சர்ச்சை அமைச்சர்களின் இலாகா பறிப்பு? விரைவில் அமைச்சரவை மாற்றம்! பரபர!
சென்னை : தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சரவையை விரைவில் மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிதாக சிலருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும், சிலரது இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டிசம்பர் அல்லது ஜனவரியில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த ரிப்போர்ட் முதல்வரின் டேபிளில் இருக்கும் நிலையில், இன்னொரு ரகசிய ஆய்வும் நடந்து வருகிறதாம்.
சமீபத்தில், எடப்பாடி பழனிசாமி, தமிழக ஆளுநரை சந்தித்து பல்வேறு துறைகள் தொடர்பாக ஊழல் புகார்களை அளித்த நிலையில், அவரது புகார்கள் பற்றி ஆய்வு செய்ய ரகசிய குழுவை ஸ்டாலின் அமைத்திருக்கிறாராம்.
உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்க்க முடிவெடுத்துள்ள முதல்வர் ஸ்டாலின், அதோடு மேலும் சில புதியவர்களுக்கும் வாய்ப்பளிக்க இருக்கிறாராம்.

திமுக ஆட்சி
தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பதவி ஏற்றார். மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டன. இதுவரை அமைச்சர்கள் பலர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, கடுமையான விவாதங்கள் எழுந்தபோதும் அமைச்சரவை மாற்றம் நடைபெறவில்லை. சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ராஜ கண்ணப்பனின் இலாகா மட்டும் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் தான் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் விரைவில் அதிரடி மாற்றங்கள் நடக்கப் போவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

புதியவர்களுக்கு இடம்?
அமைச்சர்களின் செயல்பாடுகள் தொடர்பாக கிடைத்த ரிப்போர்ட், ரகசிய குழு தயாரித்து வரும் அமைச்சர்கள் மீதான புகார்கள் பற்றிய ரிப்போர்ட், அமைச்சர்களிடையே நிலவி வரும் மோதல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த அமைச்சரவை மாற்றம் நடைபெற இருப்பதாகவும் கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஒருசில அமைச்சர்களுக்கு துறைகள் மாற்றப்படலாம் என்றும், ஒருசில எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சரவையில் புதிதாக இடம் கிடைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஈபிஎஸ் புகார்
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சமீபத்தில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து திமுக அரசு மீதான ஊழல் புகார்களை அளித்தார். அவரது குற்றச்சாட்டுகள் பொய்யானவை என அமைச்சர் தங்கம் தென்னரசு அன்றே செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்த நிலையிலும், ஈபிஎஸ்ஸின் புகார்கள் மீதான உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய முதல்வர் ஸ்டாலின், ஒரு ரகசிய குழுவை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. முதல்வருக்கு நெருக்கமான சில முக்கிய அதிகாரிகள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனராம்.

ரகசிய குழு ரிப்போர்ட்
இந்த ரகசிய குழுவின் ரிப்போர்ட் விரைவில் முதல்வர் ஸ்டாலின் கைக்கு வரும் எனக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், அமைச்சரவையில் சில அதிரடி மாற்றங்களை எதிர்பாக்கலாம் என்கிறார்கள். மேலும், துறை ரீதியாக சரிவர செயல்படாத அமைச்சர்களுக்கு இலாகா பறிப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 'ஹிட்' லிஸ்ட்டில் இருக்கும் அமைச்சர்களின் கையில் இருக்கும் முக்கிய இலாகாக்கள் சிறப்பாகச் செயல்படும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

புதியவர்களுக்கு ஜாக்பாட்
மேலும் புதியவர்கள் மற்றும் பெண்கள் சிலருக்கு அமைச்சர் பதவி வழங்க இருப்பதாகவும் தகவல் பரவுகிறது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற இருப்பதால், அவரோடு மேலும் சில இளையவர்களுக்கும், பெண்களுக்கும் ஜாக்பாட் அடிக்கப் போகிறதாம். விரைவில் ஏற்படப் போகும் அமைச்சரவை மாற்றமே இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாகவே அமையப்போவதாகக் கூறப்படுகிறது.

இலாகா பறிப்பு?
சில முக்கிய துறைகளை கையில் வைத்திருக்கும் அமைச்சர்கள், சக அமைச்சர்களையே விமர்சிக்கும் வகையில் பேசி வருவது மேல் மட்டத்தில் புகைச்சலை உண்டாக்கி இருக்கிறதாம். மற்ற துறை விவகாரங்கள் பற்றி பொதுவெளியில் விமர்சிக்கும் வகையில் பேசி வருவதை சக அமைச்சர்கள் சுத்தமாக விரும்பவில்லையாம். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடமும் முறையிட்டுள்ளதால், அமைச்சர்களை கட்டுப்படுத்தும் வகையில், இலாகாக்களை பறித்து அதிரடி காட்டப்போகிறார் முதல்வர் ஸ்டாலின் என்கிறார்கள்.

அப்செட்டின் உச்சத்தில் சீனியர்
அமைச்சரவை அமைக்கப்பட்டது முதலே, தனக்கு முக்கியத்துவம் இல்லாத இலாகா ஒதுக்கப்பட்டதாக அதிருப்தியில் இருந்த மூத்த அமைச்சர் ஒருவரை, முதல்முறையாக முக்கிய துறைக்கு அமைச்சரான ஒருவர் சீண்டியது கட்சியினர் மத்தியில் ஷாக் ஏற்படுத்தியது. இதனால் கடுமையாக அதிருப்தி அடைந்த அந்த சீனியர், இந்த துறையை வைத்துக்கொண்டு, கெட்ட பெயரும் எடுக்க வேண்டுமா எனப் புலம்பியதாகக் கூறப்படுகிறது. அவரது அதிருப்தியைக் களையும் வகையில் அவருக்கு முக்கிய துறை அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

கட்சி - ஆட்சி
சில புதுமுகங்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் நோக்கிலேயே, கட்சி அமைப்பு ரீதியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது, திமுகவின் துணை அமைப்புகளில் புதிதாக தலைவர் பதவி நியமிக்கப்பட்டிருப்பது, செயலாளர்களாக இருக்கும் சிலர் அமைச்சர்களாகும்போது, அணியின் பொறுப்பை ஏற்று நடத்துவதற்குத்தான் என்றும் கூறப்படுகிறது.

டிசம்பர் இறுதியில்?
டிசம்பர் மாத இறுதியில் அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் இந்த அமைச்சரவை மாற்றம் நடக்க இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. சென்னையை ஒட்டியுள்ள மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் மற்றும் கொங்கு மண்டல மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர், தென் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரின் ஒருவரின் இலாகா ஆகியவை உறுதியாக மாற்றப்பட உள்ளது, அவர்களுக்கு முக்கியத்துவம் இல்லாத இலாகா ஒதுக்கிவிட்டு, புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் தீர்மானித்திருப்பதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications