“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.சி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்த நிலையில், "அனைத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்" என்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளதாகக் கூறி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நேற்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி பேசுகையில், "திராவிட மாடல் அரசு என்ற பெயரில், தமிழகத்தில் திமுக கொள்ளையடித்துள்ளது.

ஆட்சி முடிந்து போகும்போது உங்கள் கனவை சொல்லுங்கள் என முதல்வர் ஸ்டாலின் கேட்கிறார். 'எனக்கு நயன்தாரா வேண்டும், எனது கனவை நிறைவேற்றுவாரா?' 'நயன்தாராவை எனக்கு திருமணம் செய்து வையுங்கள்' என ஒருவர் கேட்பார், நிறைவேற்றுவாரா?" எனப் பேசினார்.
சி.வி.சண்முகத்தின் இந்த சர்ச்சைக் கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு, மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாலபாரதி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக சி.வி.சண்முகத்தை கண்டித்து விழுப்புரத்தில் மகளிர் அமைப்பினர் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு உருவ பொம்மையை எரித்தனர். சி.வி.சண்முகம் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து, தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றனர்.
திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "திமுகவினர் ஹாட்பாக்ஸை ரூ.100-க்கு வாங்கிக் கொடுத்துள்ளார்கள். பெண்களுக்கு சேலை கொடுக்கின்றனர். ஆனால், சேலை கொடுத்தால் போதுமா? பாவாடை இல்லாமல் எப்படி கட்டுவது என பெண்கள் கேட்கின்றனர்" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.சி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்த நிலையில், 'அனைத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்' என்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இரண்டு மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?
எங்கள் மேடைகளில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் சாதனைகளையும், அவற்றால் பயனடைந்தவர்கள் குறித்தும் தரவுகளோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம்!
மறுபுறம், சொல்வதற்குச் சாதனைகளும் - செயல்படுவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருக்கின்றனர்!
தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சியைத் தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications