எல்லா அஸ்திரமும் காலி.. கடைசியாக CAA மூலம் கரையேற முயல்கிறார் மோடி: முதல்வர் ஸ்டாலின் சரமாரி தாக்கு!
சென்னை: லோக்சபா தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாகக் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி என கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் நமது நாட்டில் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் லோக்சபா தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், சிஏஏ சட்டத்தை திமுக தொடர்ச்சியாக எதிர்த்து வரும் நிலையில், சிஏஏ சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், "குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம் - இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக மாற்றியது ஒன்றிய பா.ஜ.க அரசு. இசுலாமிய மதத்தவரையும், இலங்கைத் தமிழரையும் வஞ்சிக்கும் Citizenship Amendment Act-ஐ இயற்றியது மத்திய பா.ஜ.க அரசு.
அதனை திமுக உள்ளிட்ட ஜனநாயகச் சக்திகள் கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்த்தன. ஆனால் பா.ஜ.க.வின் பாதம் தாங்கியான அ.தி.மு.க ஆதரித்து வாக்களித்ததால்தான் அச்சட்டம் நிறைவேறியது. மக்கள் எதிர்ப்பு காரணமாக அந்தச் சட்டத்தை இதுநாள் வரையில் அமல்படுத்தாமல் வைத்திருந்தது பா.ஜ.க.

திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் நாள், இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் - 2019-ஐ, ரத்து செய்திட மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானத்தை நிறைவேற்றினோம்.
இப்போது, தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாகக் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர்.
அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தைக் கொண்டு வந்த பா.ஜ.கவையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அ.தி.மு.கவையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! தக்க பாடம் புகட்டுவார்கள்!" என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications