அண்ணாவுக்கு மரியாதை செய்த கையோடு அறிவாலய உச்சியில் “திமுக பவள விழா” லட்சினையை திறந்து வைத்த ஸ்டாலின்
சென்னை: திமுகவின் பவள விழாவுக்கான லட்சினையை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முன்னதாக சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா திருவுருவச் சிலை முன்பு அண்ணா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின். அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கும் மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.
பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும் பேரறிஞர் அண்ணாவின் திருவுருப்படம், திருவுருவச்சிலை உள்ளிட்டவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேகர்பாபு, திமுக எம்.பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
திமுகவை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்.15), தந்தை பெரியார் பிறந்தநாள் (செப்.17), திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாள் (செப்.17) என்ற மூன்றையும் இணைந்து ஆண்டுதோறும் முப்பெரும் விழாவை நடத்தி வருகிறது திமுக. இந்த ஆண்டு திமுக தொடங்கப்பட்டு 75வது ஆண்டு என்பதால் மிகச் சிறப்பாக கொண்டாட முடிவெடுத்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

அந்த வகையில் இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா ஆண்டாக இருப்பதால் அனைத்து கழகத்தினர் வீடுகளிலும் கழக கொடியேற்றி கொண்டாட வேண்டும் என திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வாயிலாக அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், செப்டம்பர் 17 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் திமுகவின் பவள விழாவுக்கான லட்சினையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திறந்து வைத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அண்ணா அறிவாலயத்தின் முகப்பில் இந்த லட்சினை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த திமுக பவள விழா லட்சினையில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன. உதயசூரியன் அமைப்புடன் 75 என்ற எண்ணும், திமுக பவள விழா என எழுத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய படங்களைப் பகிர்ந்து, "75 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகம் இந்தச் சமூகத்தில் மாற்றங்கள் பல ஏற்படுத்தி, தலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் நம் பேரறிஞர் அண்ணா!
தலைவர் கலைஞர் அவர்கள் தன் இறுதி மூச்சிலும் "அண்ணா... அண்ணா..." என்றே பேசினார்; எழுதினார். அத்தகைய உணர்வுப்பூர்வமான தம்பிமார்களைப் பெற்ற ஒப்பற்ற பெருமகன்! ஒரு இனத்தின் அரசாகச் செயல்பட நம்மை ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவைப் போற்றி வணங்குகிறேன்!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications