தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரியும் மாநிலங்களுக்கான நிதி பகிர்வை பட்ஜெட்டில் உயர்த்தாத மத்திய அரசு!
சென்னை: மாநிலங்களுக்கான நிதி பகிர்வு 41 சதவீதமாகவே தொடரும் என்றும் அந்த வகையில் மாநிலங்களுக்கு ரூ 1.4 லட்சம் கோடி விடுவிக்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மாநிலங்களுக்கான நிதி பகிர்வு 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது.

2026- 2027 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா உரையாற்றி வருகிறார். அவர் கூறுகையில் 3 முக்கிய காரியங்களை மையமாக கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.
தனது உரையில் புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மாநிலங்களுக்கான நிதி பகிர்வு 41 சதவீதமாகவே தொடரும் என்றும் அந்த வகையில் மாநிலங்களுக்கு ரூ 1.4 லட்சம் கோடி விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சென்னையில் நடந்த தமிழகத்திற்கான நிதிப் பகிர்வு தொடர்பாக நிதி குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், முக்கிய திட்டங்களை தீட்டி அதனை நிறைவேற்றுவது என்பது மாநில அரசின் கையில்தான் உள்ளது.
வரி பகிர்வு முறையாக வழங்காத காரணத்தால் மாநிலங்களுக்கு சுமை அதிகரித்துள்ளது. கூட்டாட்சி தத்துவம் மூலம் மாநிலங்கள் தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்கின்றன.
சுகாதாரம், கல்வி, வேளாண்மை போன்ற திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. போதிய அளவு நிதியை மத்திய அரசு ஒதுக்காததால் தமிழகத்தின் நிதிநிலைமை பாதிக்கப்பட்டுள்ளது.
வரி பகிர்வு அடிப்படையில் தமிழகத்திற்கு நிதி வழங்க வேண்டும். ஆனால் மத்திய அரசு குறைந்த அளவு நிதி வழங்கி வருகிறது. 41 சதவீதம் நிதி பகிர்வு வழங்க வேண்டும் என்றாலும் தமிழகத்திற்கு 33.16சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் தமிழகத்திற்கான வரி பகிர்வு என்பது தொடர்ந்து வீழ்ந்து வருகிறது. எனவே மாநிலங்களுக்கான நிதி பகிர்வை 50 சதவீதமாக மத்திய அரசு உயர்த்த வேண்டும். கடந்த 45 ஆண்டுகளாக உள்ள வரி பகிர்வு முறையில் மாநிலங்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதால் 50 சதவீதம் வரி பகிர்வை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அது போல் இன்றைய தினம் காலையில் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டியவை என்பது குறித்த சமூகவலைதள பதிவில் முதல்வர் ஸ்டாலின் 50 சதவீத வரி பகிர்வு குறித்து நினைவூட்டியும் தற்போதைய பட்ஜெட்டில் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.












Click it and Unblock the Notifications