அந்தியோதயா ரயில் ஜன்னலை உடைத்துக்கொண்டு வந்த கல்.. பயணி காயம்.. நாகர்கோவில் அருகே ஷாக்!
சென்னை: நாகர்கோவிலில் இருந்து சென்ற அந்தியோதயா ரயில் மீது ஆரல்வாய்மொழி பகுதி அருகே மர்ம நபர்கள் கல் வீசியுள்ளனர். இதில் ரயில் கண்ணாடி உடைந்து, இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணி காயமடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக நாகர்கோயில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
"ஏழைகளின் ரதம்" என்று அன்போடு அழைக்கப்படும் அந்தியோதயா ரயில், முன்பதிவு இல்லாத பெட்டிகளைக் கொண்ட ஒரு முக்கிய விரைவு ரயில். தாம்பரத்தில் இருந்து மதுரை, நெல்லை வழியாக நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா ரயில் மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும்.

சென்னைக்கு அதிகாலையில் சென்றடைய விரும்பும் பயணிகளுக்கும், தென் மாவட்டங்களுக்கு இரவு நேரத்தில் பயணம் செய்ய விரும்பும் பொதுமக்களுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது அந்தியோதயா ரயில். நாகர்கோவில் - தாம்பரம் இடையிலான அந்தியோதயா அதிவிரைவு ரயில் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி முதல் 45 நிமிடங்கள் வேகமாக சென்று வருகிறது.
அந்தியோதயா ரயில் நேற்று ஆரல்வாய்மொழி அருகே வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் திடீரென்று ரயில் மீது சரமாரியாக கற்களை வீசினர். இதில் ஒரு கல், 5-வது பெட்டி பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடி மீது விழுந்தது. அந்த கண்ணாடியில் ஓட்டை விழுந்து கண்ணாடி துகள்கள் சிதறின. ஜன்னல் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த ரீனா அன்னமேரி என்ற பயணியின் மீது கண்ணாடி துண்டுகள் விழுந்தன.
இதில் அவருக்கு தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டது. ரயில் நெல்லை வந்ததும் ரீனா அன்னமேரிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரல்வாய்மொழி பகுதிக்கு சென்று ரெயில் மீது கற்களை வீசிய கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications