தொழிலாளர்கள் வாக்களிக்க விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை - தமிழக அரசு
சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான 06.04.2021 அன்று விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து புகார் அளிக்க மாநில அள
சென்னை: தேர்தல் அன்று தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் ஆணையர் வள்ளலார் தெரிவித்துள்ளார். தொழிலாளர்கள் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும், விடுமுறை அளிக்க தவறும் நிறுவனம் மீது புகாரளிக்க மாநில, மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை பொதுத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளது. இதனையடுத்து அடுத்து 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 135 (பி)-ன் கீழ் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுரைகளின்படி, தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளான ஏப்ரல் 6ம் தேதி அன்று அவர்கள் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என அனைத்து வேலையளிப்பவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டில், கட்டுமானத் தொழில் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் நாளை அவர்கள் வாக்களிக்க ஏதுவாக விடுப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், அவ்விடுப்பு நாளுக்கான ஊதியம், சாதாரணமாக தொழிலாளிக்கு ஒரு நாளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியமாகவும், பணியின் தன்மைக்கேற்ப அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறையாமலும் இருக்க வேண்டும் எனவும் அனைத்து வேலையளிப்பவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்டவாறு தேர்தல் நடைபெறும் நாளான 06.04.2021 அன்று விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது குறித்து புகார் அளிக்க மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாட்டு அறைகளில் பெறப்பட்டு வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வேலையளிப்பவர்கள் தேர்தல் நாளன்று பணியாளர்களுக்கு விடுமுறை அளிப்பது உறுதி செய்யப்படுகிறது. மேலும், விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக புகார் இருப்பின் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் அளிக்க மாநில, மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து தொழிலாளர்கள், பொதுமக்கள் தொழிலாளர் இணை ஆணையர் பா.மாதவன் 9487269270, துணை ஆணையர் டி.விமலநாதன் 9442540984, உதவி ஆணையர்கள் ஓ.ஜானகிராமன் 8610308192, எம். மணிமேகலை 94446-47125, எஸ்.பி.சாந்தி 7305280011 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் தினத்தில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து கீழ்க்கண்ட செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம். தொழிலாளர் உதவி ஆணையர் ராமராஜ் 94438 25445, துணை ஆணையர் பாலசுப்பிரமணியன் 99523 05662, உதவி ஆய்வர்கள் அருண் பாலாஜி 99944 48156, சுதர்சன் 88258 96411, குமரகண்ணன் 97913 55205, சரவணக்குமரன் 99942 12351, தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் செந்தில் ஆண்டவன் 80728 68361, சுப்பையன் 89460 23274, நஸ்ரின் பானு 90806 95576 ஆகியோரிடம் புகார் தெரிவிக்கலாம் என்று தொழிலாளர் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.