‛‛மதமென பிரிந்தது போதும்’’.. விஜயை பார்த்ததுமே மாணவரின் தாய் செய்த செயல்! மறுக்காமல் ஏற்ற ‛‛தளபதி’‛
சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளை நேரில் அழைத்து நடிகர் விஜய் வைர மோதிரம், ஊக்கத்தொகை, பாராட்டு சான்று வழங்கி வருகிறார். இந்த விழாவில் மதத்தை கடந்து நாம் அனைவரும் ஒன்று என்பது போல் மாணவரின் தாய் செய்த செயலை நடிகர் விஜய் மறுப்பு தெரிவிக்காமல் ஏற்றுக்கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
தமிழ் சினிமாவின் ‛டாப்' ஹீரோ விஜய். இவர் கடந்த ஆண்டு முதல் முதலாக 10, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளை அழைத்து சென்னையில் வைத்து பாராட்டினார். அதன்பிறகு நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் புதிதாக அரசியல் கட்சியை தொடங்கினார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அவர் கட்சியை தொடங்கி உள்ளார். 2026ல் நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் அவரது கட்சி களமிறங்க உள்ளார். இந்நிலையில் தான் கட்சி துவங்கிய பிறகு முதல் முதலாக இன்று நடிகர் விஜய் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளை அழைத்து நேரில் பாராட்டி பரிசு வழங்கி வருகிறார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் மாணவ-மாணவிகள், அவர்களின் பெற்றோர், சகோதரர்கள் என்று மொத்தம் 800 பேருக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றுள்ளனர். நடிகர் விஜய் ஒவ்வொரு மாணவ-மாணவிகளையும் அவர்களின் பெற்றோருடன் மேடைக்கு அழைத்து பாராட்டு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கி வருகிறார். மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர்களுக்கு வைரமோதிரம் வழங்கினார்.
முன்னதாக இந்த விழாவையொட்டி நடிகர் விஜய் இன்று காலையில் வீட்டில் இருந்து விழா நடக்கும் இடத்துக்கு காரில் வந்தார். அதன்பிறகு அவர் விழா நடக்கும் மேடைக்கு வந்து கொண்டிருந்தார். விஜயை பார்த்ததும் அங்கிருந்த மாணவ-மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் உற்சாகமானார்கள். அவர்களை நோக்கி கைக்கூப்பியபடி நடிகர் விஜய் மேடையில் ஏறினார். இந்த சமயத்தில் மாணவரின் தாய் ஒருவர் நடிகர் விஜயின் நெற்றியில் இந்துக்கள் வைப்பது போல் திலகமிட்டார்.

நடிகர் விஜய் கிறிஸ்தவர் என்று அவருக்கு சிலர் மதச்சாயம் பூசுகின்றனர். இத்தகைய சூழலில் விஜயின் நெற்றியில் இந்துக்கள் வைப்பது போல் மாணவரின் தாய் திலமிட்டதை அவர் மறுக்காமல் ஏற்றுக்கொண்டார். மேலும் அந்த திலகத்துடனே நடிகர் விஜய் விழா மேடையில் தனது பேச்சை தொடங்கி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். தமிழகத்தை பொறுத்தவரை சில அரசியல் கட்சி தலைவர்கள் திருநீர், குங்குமம் பூசுவது இல்லை. ஏதேனும் நிகழ்ச்சியில் திருநீர், குங்குமம் வழங்கினாலும் அதனை நெற்றியில் பூசாமல் கீழே வீசியதாக பல குற்றச்சாட்டுகள் இதற்கு முன்பு எழுந்துள்ளன. இத்தகைய சூழலில் நடிகர் விஜயின் மதம் கடந்த இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
முன்னதாக நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கி அதற்கான அறிவிப்பை வெளியிட்ட Letter pad-ல் இடம்பெற்றிருக்கும் போட்டோவில் அவர் நெற்றியில் குங்குமம் வைத்திருப்பார். அதேபோல் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தின் முகப்பு போட்டோவிலும் நடிகர் விஜய் நெற்றியில் இந்துக்கள் போன்று குங்குமம் வைத்திருக்கும் போட்டோ இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications