"வணக்கோம்" அரைகுறை குறள்.. பிரதமர் மோடி நமக்கு தந்த லாலிபாப்! இந்தி திணிப்புக்கு மதுரை எம்பி கண்டனம்
சென்னை: பிரதமர் மோடியின் அரைகுறை குறள் எல்லாம் நமக்கு தந்த லாலிபாப் என மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு மதுரை எம்பி சு வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் மொழி சட்ட குழுவின் 11 ஆவது தொகுப்பின் பரிந்துரையில் இந்தி திணிப்பு கருத்துகள் இடம்பெற்றுள்ளது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையை அமல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பிற மாநிலத்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம்
அது போல் நாடாளுமன்றத்தில் ஆங்கிலம் தெரிந்தாலும் எம்பிக்கள் இந்தியில் பதில் அளிப்பதையே வாடிக்கையாக கொண்டிருந்தனர். இதை திமுக எம்பி கனிமொழி பல முறை எதிர்ப்பு தெரிவித்து, தமிழில் பேசி பதிலடி கொடுத்திருந்தார். பணியாளர் தேர்வாணையத்தால் மத்திய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் சிஜிஎல் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. இதற்கு திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

மத்திய அமைச்சர் அமித்ஷா
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து தொழில்நுட்ப அல்லது தொழில் நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழி கட்டாயமாக இந்தியாக இருக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

கல்வி நிறுவனங்கள்
மேலும் கல்வி நிறுவனங்களில் பயிற்றுமொழியாக கட்டாயம் இந்தி இடம்பெற வேண்டும். கல்லூரிகளில் ஆங்கிலத்திற்கு பதில் இந்தியை கொண்டு வர வேண்டும். மத்திய அரசின் பணியாளர் தேர்வில் தேர்வாளர்கள் இந்தி அறிவை உறுதி செய்ய வேண்டும் போன்ற பரிந்துரைகளும் உள்ளன. இந்த அறிவிப்புக்கு பலர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

சு வெங்கடேசன் போஸ்ட்
இதுகுறித்து சு வெங்கடேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இந்தி திணிப்பு. அடுத்தகட்ட தாக்குதலுக்கு தயாராகிவிட்டது ஒன்றிய அரசு. ஒன்றிய கல்வி நிறுவனங்கள் - கேந்திரிய, நவோதயா வித்யாலயாக்கள், ஐ ஐ டி, ஐ.ஐ.எம், எய்ம்ஸ் வரை, ஒன்றிய அரசு பணி நியமனத் தேர்வுகள், ஐ. நா பயன்பாடு எல்லாவற்றிலும் இனி இந்தி வழிதான்.

அலுவல் மொழி சட்டம்
அலுவல் மொழி சட்டம், பிரிவு 1 இன் கீழான மாநிலங்களின் நீதிமன்றங்களில் இந்தி அலுவல் பயிற்சிகளில், அலுவல் நிகழ்ச்சி நிரல்களில், தூதரகங்களின் தகவல் தொடர்பில் எங்கும் எல்லாம் இந்தி. அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் மொழிச் சட்ட குழுவின் 11 வது தொகுப்பில் பரிந்துரை.

வணக்கோம்
"வணக்கோம்", அரைகுறை உச்சரிப்பில் குறள் எல்லாம் நமக்கு தந்த லாலிபாப். மொழி உரிமை, மொழி பன்மைத்துவம் மீதோ கடும் தாக்குதல். எட்டாம் அட்டவணையின் அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம் என்ற கோரிக்கை காற்றில். அனுமதிக்காது தமிழகம் என தனது பேஸ்புக் பக்கத்தில் சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications