விநாயகர் சதுர்த்தி அன்று பத்திரப்பதிவு செய்ய பிளானா? வரும் சனிக்கிழமை ஆபிஸ் லீவு! நோ ரெஜிஸ்திரேஷன்!
சென்னை: தமிழகத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு வரும் சனிக்கிழமை (செப் 7) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஆவண பதிவிற்காக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்குவது வழக்கம். ஆனால் இந்த வாரம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த அலுவலகங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரப் பதிவுத் துறை 138 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகிறது. அத்துடன் அரசு நிர்வாகத்திற்கு தேவையான நிதியை திரட்டி தருவதில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. மேலும் அரசுக்கும் பொதுமக்களுக்கும் பாலமாக இருந்து சேவையாற்றி வருகிறது.

இந்த குறிக்கோளுடன் இந்த துறை நவீனமயமாக்கலுக்கு அடிகோடிட்டுள்ளது. சென்னை, கோவை , கடலூர் உள்ளிட்ட 9 இடங்களில் மண்டல அலுவலகங்களும் அரக்கோணம், அரியலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 50 மாவட்ட பதிவாளர் அலுவலகங்களும் உள்ளன.
தமிழ்நாடு முழுவதும் 571 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகம் மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வில்லங்கம் இருக்கிறதா என பார்த்து அவ்வாறு இல்லாவிட்டால் அந்த இடத்தை நாம் விலை கொடுத்து வாங்கலாம்.
சொத்து வழிமுறை மதிப்புகள், வில்லங்க பதிவுகள், முத்திரை தாளுக்கான ஆன்லைன் கட்டணம், பத்திர முன்பதிவு போன்ற பல அம்சங்கள் சேவைகளாக வழங்கப்படுகின்றன. வாரத்தில் 5 நாட்கள் இந்த துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் இனி சனிக்கிழமைகளிலும் சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்கும் என தமிழக அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அறிவித்துள்ளது. பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்ய ஏதுவாக சார் பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணப் பதிவிற்கான முன்பதிவு டோக்கன் வழங்குவதில் தட்கல் முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சனிக்கிழமைகளில் மட்டும் பத்திரப் பதிவிற்கு ரூ. 1000 வசூலிக்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வாரம் சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படாது என தமிழக பத்திரப் பதிவு துறை அறிவித்துள்ளது. அடுத்த வாரம் அதாவது செப்டம்பர் 14 ஆம் தேதி வழக்கம் போல் சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் பத்திரப் பதிவு செய்யும் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம். ஆனால் பத்திரப் பதிவு செய்ய பொதுமக்கள் நேரில் செல்ல வேண்டிய நிலை இருந்தது.
இதனால் இடைத்தரகர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பத்திர பதிவுக்கு பொதுமக்களிடம் பல இடங்களில் லஞ்சம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதற்கு ஒரு முடிவு கட்ட பொதுமக்கள் இனி பத்திரப் பதிவு செய்ய நேரில் வர வேண்டிய அவசியமில்லை என அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications