காலை டிபனும் இல்லை.. மதிய உணவும் இல்லை... திமுக எம்.எல்.ஏ.வுக்கு ஏற்பட்ட திடீர் தலைசுற்றல்..!
சென்னை: காலை முதல் இரவு வரை உணவு கூட சாப்பிடாமல் சென்னை எழும்பூர் பகுதியில் மழைவெள்ள நிவாரணப் பணிகளை ஆய்வு செய்த காரணத்தால், திமுக எம்.எல்.ஏ.பரந்தாமனுக்கு நேற்று மாலை திடீர் தலைசுற்றல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சனிக்கிழமை இரவு விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை மாநகரம் முழுவதும் நேற்று தண்ணீரில் தத்தளித்தது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு பகுதியாக சென்று தேங்கி நின்ற மழைநீரை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

ஒரு மேயரோ, மாநகராட்சி ஆணையரோ செய்ய வேண்டிய பணிகளை முதலமைச்சராக இருப்பவர் செய்தார். இன்றும் செய்து வருகிறார். இந்நிலையில் முதல்வர் ஆய்வுக்கு வருவதற்கு முன்பாகவே சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகி நிவாரணப் பணிகளை முடுக்கிவிடத் தொடங்கினர்.
அந்த வகையில் நேற்று காலை வீட்டில் தேநீர் அருந்தியதோடு 6.45 மணிக்கு மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த எழும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பரந்தாமன் இரவு 8.45 மணிக்கு தான் வீடு திரும்பியிருக்கிறார். இடையே காலை சிற்றூண்டியோ, மதிய உணவோ அவர் எடுத்துக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

நேற்று காலை 11 மணியளவில் எழும்பூர் பகுதியை பார்வையிட வந்த முதலமைச்சர் ஸ்டாலின் சுமார் ஒரு மணி நேரம் அங்கிருந்தார். பின்னர் அங்கிருந்து புறப்படும் போது, உடனடியாக செய்ய வேண்டிய சில பணிகள் குறித்து தொகுதி எம்.எல்.ஏ.வான பரந்தாமனுக்கு முதல்வர் சில அறிவுறுத்தல் கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தன்னிடம் முதலமைச்சர் கூறிய இன்ஸ்ட்ரக்ஷனை முழுமையாக செய்து முடிப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கிய பரந்தாமன் எம்.எல்.ஏ. உணவு கூட வேண்டாம் என கூறிவிட்டதாக தகவல் கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் மழையில் நனைந்துகொண்டும், தேங்கி நின்ற மழைநீரில் நடந்தும் சென்ற அவர், சுமார் 12 மணி நேரத்துக்கு மேலாக எதுவுமே சாப்பிடாமல் இருந்ததால் பசி மயக்கத்தில் அவருக்கு லேசான தலைசுற்றல் கூட ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே இன்று இரண்டாவது நாளாகவும் சென்னை எழும்பூர் பகுதியில் ஆய்வில் ஈடுபட்டுள்ள அவர், தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார். சென்னை எழும்பூரை பொறுத்தவரை தென்மாவட்ட மக்கள் ரயில்களில் வந்திறக்க கூடிய முக்கிய இடமாகும். இதனால் ரயில் நிலையம் பகுதி உள்ளிட்ட இன்னும் பல இடங்களில் ராட்சத மோட்டர் மூலம் நீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு அகற்றப்படும் பணிகள் நடைபெறுகின்றன.












Click it and Unblock the Notifications