கட்டாய கல்வி உரிமை சட்ட விவகாரம்: மத்திய அரசுக்கு உத்தரவு போட்ட சுப்ரீம் கோர்ட்!
டெல்லி : கட்டாய கல்வி உரிமை சட்ட விவகாரம் தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. தமிழக அரசின் மனுவுக்கு 4 வாரங்களில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏழை எளிய மாணவர்களும் தனியார் பள்ளிகளில் படிக்க வழிவகை செய்யும் வகையில் கட்டாய கல்வி உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை அரசே ஏற்கிறது. மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள இந்த சட்டத்தின்படி நடப்பு கல்வி ஆண்டுக்கு இதுவரை சேர்க்கை தொடங்கப்படவில்லை.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈஸ்வரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை கடந்த ஜூன் மாதம் 10 ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள், தமிழகத்துக்கான நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டதோடு, நிதி கிடைக்கவில்லை என்று காரணம் கூறி, தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை தமிழ்நாடு அரசு வழங்காமல் காலம் தாழ்த்த கூடாது. உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு போதிய நிதியை விடுவிக்காமல் இருந்து வரும் நிலையில், மாநில அரசு எப்படி கட்டாயக் கல்வி உரிமை சட்டம் தொடர்பான திட்டத்தை செயல்படுத்த முடியும்? என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே தனது தரப்பு கருத்தையும் கேட்க கோரி ஈஸ்வரன் கேவியட் மனு தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (திங்கட்கிழமை) விசாரித்தது. RTE சட்டத்தின் கீழ், மத்திய மற்றும் மாநில அரசுகள் கல்விக்கு நிதி அளிக்கும் பொறுப்பை ஒரே நேரத்தில் பகிர்ந்து கொள்கின்றன. மாநிலம் மட்டுமே முதன்மைப் பொறுப்பு என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததில் தவறு உள்ளது என தமிழ்நாடு அரசு தரப்பு வாதம் வைத்தது. மேலும், 2021-22, 2022-23 நிதி ஆண்டுகளுக்கு வழங்க வேண்டிய 342.69 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கவில்லை என தமிழ்நாடு அரசு வாதம் வைத்தது.
இதையடுத்து, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற நிதி தராத விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. 4 வாரங்களில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications