இறையன்பு எடுத்த ஆக்சன்.. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவருக்கு செக்- களமிறக்கப்பட்டார் ஐஏஎஸ் சுப்ரியா
சென்னை: தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய புதிய தலைவராக ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த வெங்கடாச்சலம் மீது லஞ்ச ஊழல் புகார் வைக்கப்பட்ட நிலையில் இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த வெங்கடாசலத்தின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த வாரம் சோதனை நடத்தினார்கள். பல்வேறு நிறுவனங்களுக்கு என்ஓசி வழங்கியதில் இவர் முறைகேடு செய்ததாக புகார் வைக்கப்பட்டது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், லஞ்சம் வாங்கியதாகவும் புகார் வைக்கப்பட்ட நிலையில் அவர் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மொத்தம் 12 இடங்களில் 10 மணி நேரத்திற்கும் மேலாக ரெய்டு நடத்தப்பட்டது.

புகார் என்ன
மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் பதவியில் இருந்த வெங்கடாச்சலம் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி ஆவார். 2019ல் இருந்து இவர் மாசு கட்டுப்பாடு வாரிய தலைவராக இருந்தார். இந்த நிலையில் தற்போது அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பல்வேறு நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு என்ஓசி வழங்கியதாக இவர் மீது புகார் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது நிறுவனங்களை தொடங்க, மாசுக்கட்டுப்பாடு என்ஓசி வழங்க இவர் கோடி கோடியாக லஞ்சம் வாங்கியதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது.

லஞ்சம்
மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியை பயன்படுத்திக்கொண்டு இவர் பல்வேறு நிறுவனங்களுக்கு, திட்டங்களுக்கு முறைகேடாக, தனது தொண்டு நிறுவன பெயரில் லஞ்சம் பெற்றுக்கொண்டு, அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. அதோடு இவரின் வீட்டில் செய்யப்பட்ட சோதனையில், ரூ 2.5 கோடி மதிப்பிலான 6.5 கிலோ தங்கம், ரூ 13.50 லட்சம் ரொக்கம், 15 கிலோ சந்தனப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இவருக்கு எதிராக விசாரணை தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கும் பதிவு செய்தது.

மாற்றம்
இந்த நிலையில்தான் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய புதிய தலைவராக ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்த 24 மணி நேரத்தில், தலைமை செயலாளர் இறையன்பு இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். வனத்துறை தொடர்பான ஆக்கப்பூர்வமான பணிகளில் அதிகம் கவனிக்கப்பட்டவர் சுப்ரியா சாகு.

வனத்துறை
இயற்கை மீதும், விலங்குகள் மீதும் அதிக ஆர்வம் கொண்டவரான சுப்ரியா சாகுவிற்கு ஐஏஎஸ் வட்டாரத்தில் நல்ல பெயர் இருக்கிறது. நீலகிரியில் அடிப்பட்ட யானை ஒன்றை காப்பாற்றுவதற்காக இவர் நேரில் களமிறங்கி பணியாற்றியது அதிக பாராட்டுகளை பெற்றது. இந்த யானை காப்பாற்றுப்பட்டு குணப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சுப்ரியா சாகுவிற்கு முக்கியமான வாரியமான தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவி அளிக்கப்பட்டு இருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications