"சூர்யா அண்ணன்.." கையில் குழந்தையுடன் உரிமையாக பெண் வைத்த கோரிக்கை! அடுத்து நடந்ததை பார்த்து கலங்கிய சிவக்குமார்
சென்னை: அகரம் அறக்கட்டளை சார்பில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பல நெகிழ்ச்சி சம்பவங்கள் நடந்தது. அங்குக் கையில் குழந்தையுடன் மேடைக்கு ஏறிய இளம்பெண், தனது வெற்றிப் பாதையை மேடையில் பகிர்ந்து கொண்டார். மேலும், உரிமையுடன் அவர் சூர்யாவுக்கு ஒரு கோரிக்கை வைக்க அதை அவரும் சந்தோஷமாக நிறைவேற்றி வைத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, "அகரம்" என்ற பெயரில் கல்வி அறக்கட்டளை நடத்தி வருகிறார். கடந்த 2006ம் ஆண்டு தொடங்கப்பட்ட அகரம் அறக்கட்டளை மூலம் இதுவரை ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் படித்து பட்டம் பெற்றுள்ளனர்.

அகரம்
ஒவ்வொரு ஆண்டும் அகரம் அறக்கட்டளை மூலம் நிகழ்ச்சி நடத்தப்படும். அதன்படி இந்தாண்டு நடந்த அகரம் நிகழ்ச்சியில் சூர்யா, சிவக்குமார், ஜோதிகா, கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் எம்பியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்தது. மேடை ஏறிய பலரும் அகரம் மூலம் தங்கள் எப்படிப் படித்து, வேலைக்குச் சென்றனர் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்தனர்.
கடந்து வந்த பாதை
அப்படி தான் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் மேடையில் தான் கடந்து வந்த பாதையைப் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "திறமை இருந்தும் கல்வி கற்க முடியாமல் போனது. கல்வி கற்கப் பணம் தடையாக இருக்கக்கூடாது என்பதால் எங்களுக்குத் தோள் கொடுத்துத் தூக்கிவிட்டார் சூர்யா அண்ணா.. இப்போது பல வெற்றிகளைக் கண்ட பிறகு நான் உங்கள் முன் நிற்கிறேன். 15 வருட வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. நான் இந்த மேடையில் நிற்பேன் என நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அப்படியொரு வறுமையில் இருந்து வந்த நான் இன்று 100 பேருக்குப் பயிற்சி தருகிறேன்.
உரிமையாக வைத்த கோரிக்கை
ஆங்கிலம் பேசவே ஒரு காலத்தில் கஷ்டப்பட்டேன். அகரம் எங்களுக்குக் கல்லூரியை மட்டும் தேர்வு செய்து வழங்கவில்லை. பல திறமைகளைச் சொல்லிக் கொடுத்தார்கள். இப்போது நான் எனது சூர்யா அண்ணா கிட்ட ஒன்று கேட்க விரும்புகிறேன். எனது குழந்தைக்கு 3.5 வயதாகிறது. கல்வி கற்க ஆரம்பிக்கப் போகிறார். எனது குழந்தைக்கு அ போட்டு நீங்கள் கல்வியைத் தொடங்கி வைக்க வேண்டும். நிச்சயம் எனது மகளும் பல வெற்றிகளை அடைவார்" என்று சொன்னார்.
கலங்கிய சூர்யா
அந்த பெண்ணின் கதையைக் கேட்டவுடன் சூர்யா எமோஷ்னல் ஆகிவிட்டார். அவரது கண்களில் நீர் தேங்கியது. அதே மகிழ்ச்சியுடன் எழுந்து மேடைக்கு வந்த சூர்யா, அந்த பெண்ணின் குழந்தைக்கு நெல்லில் "அ" போட்டு கல்வியைத் தொடங்கி வைத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதை பார்த்து நடிகர் சிவக்குமாரும் கலங்கி போனார்.
இந்த நிகழ்ச்சியில் மேலும் பல நெகிழ்ச்சி சம்பவங்கள் அரங்கேறியது. அகரம் பயனாளர் ஒருவர், தான் உருவாக்கிய ஸ்கூட்டி ஒன்றை மேடைக்குக் கொண்டு வந்து சூர்யாவிடம் காட்டினார். அதை ஆர்வமாகப் பார்த்துத் தெரிந்து கொண்ட சூர்யா, டக்கென அதில் ஏறி ஒரு ரைடும் போனார். மேடையிலேயே அவர் வண்டியை ஓட்ட அரங்கமே அதிர்ந்தது.












Click it and Unblock the Notifications