கியாரே செட்டிங்கா? ஆதவ் கொடுத்த சர்வே.. திருமா புதிய மூவ்.. ரவீந்திரன் தந்த தகவல்
சென்னை: திமுக கூட்டணியை விட்டு விசிக வெளியேறி அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் 2026இல் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
விஜய் நடத்தப் போகும் மாநாட்டுச் செய்தியை விட, விசிக நடத்த உள்ள மது ஒழிப்பு மாநாடுதான் இப்போது ஹைலைட் ஆக இருக்கிறது. பலரும் அதைப் பற்றி விவாதித்து வருகின்றனர். விசிக விரைவில் அதிமுக கூட்டணிக்குப் போவதற்காக ஒரு முன்னோட்டம் இதன் மூலம் தெரிகிறது என்கிறார்கள். ஆனால், மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக விருப்பம் இருந்தால் கலந்து கொள்ளலாம் என்றுதான் திருமாவளவன் சொல்லி இருந்தார். நேரடியாகச் சந்தித்து எடப்பாடி பழனிசாமியிடம் ஆதரவு கேட்போம் என்று அவர் சொல்லவில்லை. அதேபோல் நேற்று விஜய் வருவாரா என்ற கேள்வியை திருமாவிடம் முன்வைத்த போது அவர் உற்சாகமாக அதை வரவேற்றுப் பேசி இருக்கிறார்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், விஜய் மாநாடு நடத்தும் காலகட்டம் பார்த்து விசிக ஏன் இந்த மாநாட்டை நடத்த வேண்டும்? இது விஜய்யின் மாநாடு ஹைலைட் ஆகாமல் தடுப்பதற்காக திமுக போட்டுக் கொடுத்த திட்டத்தை விசிக செயல்படுத்தி வருகிறது என்றும் சொல்கிறார்கள். அதை நடக்கும் விவாதத்தைப் பார்த்தால், அப்படியும் இருக்க வாய்ப்பு உள்ளது என்றே தெரிகிறது. ஏனென்றால், மது ஒழிப்பு பற்றிப் பேசினால் அதில் எப்படி திமுக அரசாங்கத்தை விமர்சிக்காமல் இருக்க முடியும்? ஏதேனும் வார்த்தை தவறிவிட்டால் வம்பு வராதா? அதை உணராதவரா திருமா?
அப்படி இருந்தும் இதைத் தைரியமாகச் செய்கிறார் என்றால் முன்பே திமுக இதை நடத்தப் பச்சைக் கொடி காட்டிவிட்டது என்றுதானே புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் திமுக அமைச்சர்கள் இந்த மாநாட்டை வரவேற்றுப் பேசுகிறார்கள். விமர்சிக்கவே இல்லை. ஆக, கியாரே செட்டிங்கா? என்று சிலர் கேட்கிறார்கள்.
இதனிடையே விசிக ஐடி விங் ஆதவ் அர்ஜுன் எடுத்துக் கொடுத்த சர்வே அடிப்படையில்தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்றும் சொல்கிறார்கள். இது பற்றி அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பேசும்போது, "திமுக கூட்டணி உடையப்போவதில்லை. ஆனால், அதிமுக 2026 வரை இதை வைத்து கொஞ்சம் சந்தோசப்பட்டுக் கொள்ளலாம். அதில் தப்பில்லை.ஆனால், விசிக ஒருபோதும் அதிமுக கூட்டணிக்குப் போகாது. திமுக வெற்றிக் கூட்டணி. அதுதான் உண்மை. ராமதாஸ் மது ஒழிப்பு பற்றி பேசியபோது யாரும் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. திருமாவளவன் மது ஒழிப்பு பற்றி பேசியதை வைத்து சீமான் சரியான செக் வைத்துவிட்டார்.

மது ஒழிப்பு யார் கொண்டு வருகிறார்களோ அந்தக் கட்சியுடன் தான் கூட்டணி என்று அறிவிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். திருமாவுக்கு தேர்தல் இல்லாத காலங்களில் கட்சியைக் கவனப்படுத்த வேண்டி உள்ளது. அதற்கான யுக்தியாக இந்த மது ஒழிப்பு மாநாட்டைக் கையில் எடுத்துள்ளார். மற்றபடி தேர்தல் கொள்கையாக இதை அறிவிக்க அவரால் முடியாது. சாராய ஆலைகளை நடத்தும் திமுகவுடன் திருமா கூட்டணி வைத்திருக்கிறார் என்பதை சீமான் வெட்டவெளிச்சமாகப் போட்டு உடைத்துள்ளார்.
இதில் அதிமுக விதிவிலக்கல்ல. அவர்களும் சாராய ஆலைகளை நடத்துகிறார்கள். பிறகு எப்படி மது ஒழிப்பு பேச முடியும். அதிமுக ஏற்கெனவே வன்னியர் கட்சியாக மாறிவிட்டது. அதை விசிக ரவிக்குமாரே கூறி இருக்கிறார். அந்தக் கூட்டணிக்கு திருமா சென்றால் ஓட்டு பரிமாற்றம் நடக்காது. 2+2 சேர்ந்து 1 ஆகிவிடும். அதிமுக வன்னியர்கள் விசிகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அதிமுக சிதம்பரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், கடலூர், நாமக்கல் ஆகிய வட தமிழ்நாட்டில் பலமாக உள்ளது. அங்கே விசிகவும் பலமாக உள்ளது. இந்த இருவரும் சேர்ந்தால் வெற்றி பெற முடியாது. திமுக வன்னியர்கள்தான் விசிகவுக்கு வாக்களிப்பார்கள். அது திருமாவுக்கே தெரியும்.

அதே திமுக கூட்டணியில் உள்ள வேல்முருகன் அதிமுக கூட்டணிக்குச் சென்றால் வெற்றிபெற முடியும். அவருக்கு அதிமுக வன்னியர்கள் வாக்களிப்பார்கள். அதே சமயம் அவருக்கு வடதமிழகத்தில் பலமான தொகுதியை எடப்பாடி ஒதுக்கவேண்டும். அப்படி என்றால் வெற்றி பெறுவர். ஆனால், விசிக போனால் வெற்றி பெறாது. திமுகவை விட அதிமுக அதிக இடங்களைக் கொடுக்கலாம். அது வெறும் சீட்டுதான். திமுக கொடுப்பதால் பதவி. அது உறுதி என திருமா அறிவார்" என்கிறார்.
ஆதவ் அர்ஜுன் எடுத்து கொடுத்துள்ள சர்வே உண்மையா? என்பது பற்றி கருத்து தெரிவித்த ரவீந்திரன் துரைசாமி, " ஆதவ் அர்ஜுன் விசிகவை வளர்க்க இதைப்போன்ற யுக்திகளை திருமாவுக்கு வகுத்து தரலாம். ஆனால், அவர் சர்வே எடுத்துக் கொடுத்தார் என்பது ஊகம் தான். உண்மையில்லை. அது வெறும் கற்பனையில் சொல்கிறார்கள்" என்று பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications