கிலியை கிளப்பிய புலியை உயிருடன் பிடித்த வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு
புலியை உயிருடன் பிடித்த வனத்துறைக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்
சென்னை: உயிரோடு பிடிக்கப்பட்ட டி23 புலிக்கு, தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம்.. இந்த தகவலை வனத்துறையினர் சென்னை ஹைகோர்ட்டில் தெரிவிக்கவும், அதற்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். அத்துடன், நிபுணர்களின் உதவியுடன் புலியின் குணாதிசியங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள தேவன் தனியார் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் சந்திரன்.. 51 வயதாகிறது.. இவரை கடந்த 24ம் தேதி ஒரு புலி தாக்கி கொன்றுவிட்டது.
இதுவரை 4 பேரை தாக்கி அந்த புலி கொன்றுள்ளது.. ஏகப்பட்ட கால்நடைகளையும் பலிவாங்கி உள்ளது. இதனால் ஆட்கொல்லி புலியை பிடிக்க அந்த பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்ததையடுத்து, புலியை பிடிக்கும் பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தினர்..

புலி
இந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்... ஆனால் புலியை பிடிக்க முடியவில்லை... ஆனால், அப்படியே விட்டால் அந்த ஆட்கொல்லி புலி மேலும் பலரை காவு வாங்கிவிடும் என்பதால் பொதுமக்கள் பயந்தனர்.. உடனடியாக மயக்க மருந்தில் பிடிபடாவிட்டால், புலியை சுட்டுக் கொன்று பிடிக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை எழுப்பி போராட்டம் செய்தனர்.

உயர்நீதிமன்றம்
இதையடுத்து, புலியை சுட்டுக் கொல்வது உள்பட அதை வேட்டையாடுவதற்கான உத்தரவை முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார்நீரஜ் பிறப்பித்திருந்தார்... இதை எதிர்த்து உத்தரபிரதேசம் நொய்டாவை சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்... இதேபோல் பிப்பிள் இன் கேட்டல் ஆப் இந்தியா என்ற விலங்குகள் நல அமைப்பு சார்பிலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

தலைமை நீதிபதி
இந்த வழக்குகளில் குறிப்பிட்ட அந்த புலி ஆட்கொல்லி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனவும், புலியை வேட்டையாடுவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன் உரிய சட்டவிதிகளை பின்பற்றவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது... மேலும், இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி,நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, அந்த புலியை கொல்லக்கூடாது, நம் நாட்டில் குறைந்த எண்ணிக்கையிலான புலிகள் மட்டுமே உள்ளன என்று தெரிவித்தனர்.

பாராட்டு
அத்துடன் உயிருடன் பிடித்த பின்பு அதன் குணாதிசயங்களை ஆராய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, டி23 புலி உயிரோடு பிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வனத்துறை சார்பில், தெரிவிக்கப்பட்டது. இதற்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், நிபுணர்களின் உதவியுடன் புலியின் குணாதிசியங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications