ஆட்சிக்கு அவப் பெயர் வரும் முன் திமுகவினர் மீது நடவடிக்கை எடுங்கள்... முதல்வரை வலியுறுத்தும் ஓபிஎஸ்
அரசுப் பணிகளில் குறுக்கீடு செய்து நோய் தடுப்பு பணிகளில் தொய்வு ஏற்படுத்தும் கட்சியினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: அடையாரில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று தற்போது இருக்கும் களப்பணியாளர்களை நீக்கிவிட்டு அவர்கள் கூறுபவர்களை பணியில் அமர்த்த வேண்டும் என திமுகவினர் மிரட்டி இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு அதிகாரிகளை கட்சிக்கு அப்பாற்பட்டவர்களாக பார்க்க வேண்டும் அவர்களும் அப்படியே நடக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் பேரறிஞர் அண்ணா.
அதாவது அரசு பணிகளில் கட்சியினரின் தலையீடு இருக்கக் கூடாது என்பது தான் இதன் பொருள். ஆனால் இதற்கு முற்றிலும் முரணான வகையில் திமுகவினரின் செயல்பாடுகள் இருக்கின்றன.

நோய் தடுப்பு பணிகள்
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற தமிழ் பழமொழிக்கேற்ப ஒரே ஒரு உதாரணத்தை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். சென்னையில் பல நோய்த்தொற்று தடுப்பு பணியில் நன்கு பயிற்சி பெற்ற களப்பணியாளர்கள், சுகாதாரம், பொறியியல், வருவாய் துறை பணியாளர்களுடன் இணைந்து திறம்பட பணிபுரிந்து வருகின்றனர்.

மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று மிரட்டல்
இதன் காரணமாக தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வந்தாலும், சென்னையை பொருத்தவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் திமுகவினர் சென்னை அடையாரில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று தற்போது இருக்கும் களப்பணியாளர்களை நீக்கிவிட்டு அவர்கள் கூறுபவர்களை பணியில் அமர்த்த வேண்டும் என மிரட்டி உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

களப்பணியாளர்களை மாற்றுவதா
அதற்கு அதிகாரிகள் கட்சியின் பரிந்துரையின் பேரில் பணியாளர்கள் யாரும் நியமிக்கப்படுவதில்லை என்று தெரிவித்ததாகவும் பயிற்சி பெற்று திறம்பட பணியாற்றி கொண்டிருக்கும் தற்போதைய களப்பணியாளர்களை மாற்றி அமைத்தால் நோய் தடுப்பு பணியில் தொய்வு ஏற்படும் என்று எடுத்துக்கூறி உள்ளதாகவும் பத்திரிக்கையில் செய்தி வந்தன.

ஆட்சிக்கு அவப்பெயர்
இது போன்ற முறையை அனைத்து இடங்களிலும் திமுகவினர் கடைபிடித்தால் நோய் தடுப்பு பணியில் தொய்வு ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் அவப்பெயர் ஏற்பட கூடிய சூழ்நிலை உருவாகும்.

நடவடிக்கைத் தேவை
எனவே கொரோனா தடுப்பு பணிகள் தொய்வின்றி தங்கு தடையின்றி நடக்க ஏதுவாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications