Actor Rajesh Death: கலைத்துறையின் கண்மணி.. தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்
சென்னை: தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகர் ராஜேஷ் காலமானார். அவருக்கு வயது 75. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வந்த இவர் ஹீரோ ரோல் முதல் குணச்சித்திர நடிகர் வரை பல்வேறு வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
"அவள் ஒரு தொடர்கதை" மூலம் அறிமுகமானார் ராஜேஷ். இவர் "அந்த 7 நாட்கள்" படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இவர் கடைசியாக நடித்த தமிழ் படம் "மெர்ரி கிறிஸ்துமஸ்". இவர் உடல் ஆரோக்கியம் குறித்து மருத்துவர்களுடன் பேட்டி எடுத்து வந்தார்.

ராஜேஷ் நேர்மறை எண்ணங்கள் கொண்டவர். பலருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியவர். இவர் 1949ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வில்லியம்ஸ் நாடார்- லில்லி கிரேஷ் மான்கொண்டார் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். தேனி மாவட்டத்தில் சின்னமனூரில் படித்தார்.
ஆசிரியர் பணி
1979 ஆம் ஆண்டு வரை ஆசிரியராக பணியாற்றியிருந்தார். 1974 ஆம் ஆண்டு "அவள் ஒரு தொடர்கதை" என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்றார். ஆனால் அதில் சிறிய வேடத்தில் மட்டுமே நடித்தார். ராஜ்கண்ணு தயாரித்த "கன்னி பருவத்திலே" தான் அவரது முதல் ஹீரோ படம். கே பாலசந்தரின் "அச்சமில்லை அச்சமில்லை" என்ற படத்தில் ராஜேஷ் நடித்தார்.
குணச்சித்திர வேடம்
பின்னர் அவர் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். கமலுடன் "சத்யா", "மகாநதி", "விருமாண்டி" உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தமிழ் வசனங்களை தெளிவாக பேசக் கூடியவர். இவர் ஹோட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருந்தார்.
ஹாலிவுட் நடிகர்கள்
அவர் ஹாலிவுட் நடிகர்களின் வாழ்க்கை வரலாற்றையும் தமிழில் எழுதியிருந்தார். பெரியாரின் சித்தாந்தங்களில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஜோதிடத்தில் முழு நம்பிக்கை கொண்டவர். ஜோதிடம் தொடர்பான கட்டுரைகளை எழுதியுள்ளார்.
சமூக சீர்திருத்தவாதி
1983ஆம் ஆண்டு பிரபல சமூக சீர்திருத்தவாதியும் திராவிட இயக்கத் தலைவருமான பட்டுக்கோட்டை டேவிஸ் வாணாதிராயரின் பேத்தி ஜோன் சில்வியா வாணாதிராயரை மணந்தார். இவர்களுக்கு திவ்யா, தீபக் ஆகிய இரு குழந்தைகள்.
எம்ஜிஆர் திரைப்படம்
இவர் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் தலைவராக கடந்த 2 ஆண்டுகளாக பொறுப்பு வகித்திருந்தார். அண்மைக்காலமாக உடல் ஆரோக்கியம் குறித்து பல்வேறு துறை மருத்துவர்களை பேட்டிக் கண்டிருந்தார்.
முத்திரை
யோக முத்திரை, யோகா, சித்த வைத்தியம், உள்ளிட்ட முறைகளில் எப்படி நோயற்ற வாழ்வை வாழ்வது என்பது குறித்தும் அவர் மருத்துவர்களிடம் கேட்டிருந்தார். "அந்த 7 நாட்கள்" படத்தில் தனது மனைவி வசந்தி- கோபியை காதலித்தார் என தெரிந்ததும் கோபம் கொள்ளாமல் அவர்களை சேர்த்து வைக்க முயற்சித்து, சமூகத்தால் ஏற்க முடியாவிட்டாலும் மனைவியே ஆனாலும் கட்டாயமாக குடும்பம் நடத்த முடியாது என்பதை காட்டினார்.
டப்பிங் கலைஞர்
இவர் டப்பிங் கலைஞரும் கூட! இவர் தனது யூடியூப் பக்கத்தில் பல புத்தகங்களை எழுதியுள்ளார். இப்படி பன்முகத்திறன்களுக்கு சொந்தக்காரரான ராஜேஷ் இன்று காலமானார். அவரது ராமாபுரம் வீட்டில் இருந்த போது திடீரென அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
ராஜேஷ் காலமானார்
இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது உடல் ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. ராஜேஷின் மறைவுக்கு தமிழ் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications