இதைத்தான் எதிர்பார்த்தனர் தமிழக மக்கள்! மலர்ந்து விட்ட அரசியல் நாகரீகம்.. மாறி மாறி பாராட்டு, சபாஷ்!
சென்னை: நடைபெற்று முடிந்த, தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர், பல்வேறு அரிய நிகழ்வுகளுக்கும், நெகிழ்ச்சிகளுக்கும் சாட்சியாக மாறிவிட்டது.
ஆகஸ்ட் 13ம் தேதி முதல், செப்டம்பர் 13ம் தேதி வரை நடைபெற்ற இந்த கூட்டத் தொடரில், நிதித் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
இதன்பிறகு, பட்ஜெட் மீதான விவாதங்களும், மானிய கோரிக்கை மீதான விவாதங்களும், அதற்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிக்கும் நிகழ்வுகளும் நடந்தன.

சுவாரசிய அரிய நிகழ்ச்சிகள்
இவை வழக்கமான நிகழ்வுகள்தான் என்றாலும், சட்டசபை கூட்டத் தொடரின் ஊடே ஊடுருவி பார்த்தோமானால், பல சுவாரசிய நிகழ்வுகள் அரங்கேறியதை கவனிக்க முடியும். இவை எப்போதுமே நிகழாத அரிய அரசியல் நிகழ்ச்சிகளாகவும் மாறிப்போயிருப்பதுதான், அதன் சிறப்பம்சமாகும். கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய, திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த இரு பெரும் ஆளுமைகள் இல்லாத நிலையில், தமிழக அரசியல் நாகரீகம், இன்னும் கட்டிக் காப்பாற்றப்படுகிறது என்பதற்கான சான்றாகவும், அவை நடவடிக்கைகளில், உறுப்பினர்களின் பங்களிப்பு இருந்ததை கவனிக்க முடிந்தது.

கருணாநிதி நினைவிடம்
கருணாநிதி நினைவிடம் அமைப்பு தொடர்பான அறிவிப்பும், அதைத் தொடர்ந்த நிகழ்வுகளையுமே எடுத்துக் கொள்வோமே.. சட்டசபையில் பேரவை விதி எண் 110ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின், கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு சட்டசபையில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்தனர். கட்சி எல்லைகளை கடந்து அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. ஆகிய கட்சிகளும் இந்த அறிவிப்பை வரவேற்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

கருணாநிதி பக்தர்
கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வரவேற்கிறேன். அவரை பற்றிய அனைத்து சிறப்பம்சங்களும் நினைவிடத்தில் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். என் தந்தை தீவிர கருணாநிதி பக்தர். அவர் பெட்டியில் எப்போதும் கருணாநிதியின் 'பராசக்தி' பட வசனப்புத்தகம் இருக்கும். அவற்றை மனப்பாடமாக ஒப்பிப்பார். அவர் இல்லாத நேரத்தில் நாங்கள் எடுத்து படித்துள்ளோம். வரலாற்றில் கருணாநிதியின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும். எங்களின் எதிர்க்கட்சி தலைவர், அ.தி.மு.க. உறுப்பினர்கள் சார்பில் இந்த அறிவிப்பை முழுமனதோடு ஒருமனதாக வரவேற்கிறோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை எதிர்க்கட்சி தலைவருமான ஓ.பன்னீர் செல்வம் பேசி திமுகவினரையே நெகிழ வைத்து விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

துரைமுருகனுக்கு பல தரப்பும் பாராட்டு
அது மட்டுமல்ல.. சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். எனவே, அவரை பாராட்டி தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் ஸ்டாலின். திமுக தரப்பு வாழ்த்தி பேசியது பெரிதல்ல. ஆனால் அதிமுகவின் ஓபிஎஸ், பாஜகவின் நயினார் நாகேந்திரன், பாமகவின் ஜிகே மணி என அனைவருமே ஒன்று திரண்டு வாழ்த்தினார்கள்.

துரைமுருகனை பாராட்டிய ஓபிஎஸ்
ஓ.பன்னீர்செல்வம், பேசுகையில் "2001ம் ஆண்டில் இருந்து அவரது அவை நடவடிக்கைகளை நான் கவனித்து வருகிறேன். உயர்ந்த உள்ளத்துக்குச் சொந்தக்காரர் துரைமுருகன். அவர் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். அனைவரது உள்ளங்களையும் கவர்ந்த துரைமுருகன், சட்டசபை உறுப்பினர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருக்கிறார்." எனத் தெரிவித்தார்.

எடப்பாடியை பாராட்டிய ஸ்டாலின்
இவையெல்லாம் எதிர்கட்சிகள் தரப்பிலிருந்து ஆளுங்கட்சிக்கு வந்த பாராட்டுக்கள். ஆளும் திமுக தரப்பில் இருந்து சாட்சாத் முதல்வர் ஸ்டாலின் பிரதான எதிர்கட்சி தலைவருக்கு நன்றி தெரிவித்த சம்பவமும் இந்த கூட்டத்தொடரில் தான் அரங்கேறியது. நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின். இதற்கு அதிமுக ஆதரவு தெரிவித்து. எனவே ஒருமனதாக மசோதா நிறைவேறியது. மசோதா வாக்கெடுப்புக்கு விடப்படும் முன்பாக, சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.

அரசியல் நாகரீகம்
இப்படியாக ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும் மாறி மாறி தேவைப்படும் இடங்களில் பாராட்டிக் கொண்டனர். இது போன்ற அரசியல் நாகரீகத்தை முன்னெடுத்து சென்றதற்கு இந்த சட்டசபை கூட்டத்தொடர் சாட்சியாக மாறியது. கர்நாடகா, கேரளா என நமது அண்டை மாநிலங்களில் கூட அரசியல்வாதிகள் அரசியல் நாகரிகத்தை பேணிப் பாதுகாத்து வரும் நிலையில் தமிழகத்தில் அதுபோன்ற நிலை இல்லாமல் எதிரிகளை போல செயல்படுகின்றனர் என்று விமர்சனங்கள் இருந்தன. ஆனால் சமீப காலமாக தமிழக அரசியல் சூழ்நிலையில் அரசியல் நாகரீகம் பெருகியுள்ளது. இந்த பேரவைக் கூட்டத் தொடர், அதற்கான, ஒரு வரலாற்று சான்று.












Click it and Unblock the Notifications