தமிழகத்தில் 71.79% வாக்குகள் பதிவு - அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இல்லை அமைதியாக முடிந்தது
தமிழக சட்டசபைத் தேர்தல் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இன்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளது. 71.79 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் 71.79 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 234 சட்டசபைத் தொகுதிகளிலும் சின்னச் சின்ன சம்பவங்கள் தவிர மிகவும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளதாகவும் சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வெயில் காலம் என்பதால் வாக்குச்சாவடிகளில் காலை 6 மணிக்கெல்லாம் வாக்களிக்கும் ஆர்வத்தில் வாக்காளர்கள் குவியத்தொடங்கினர். பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டிருந்தது.
கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு சானிடைசர்கள், முகக்கவசம் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டது. காலை 7 மணி முதலே வாக்காளர்கள் வாக்கு செலுத்த தொடங்கினர். ஒரு சில பூத்களில் ஈவிஎம் இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டாலும் அவை உடனடியாக மாற்றம் செய்யப்பட்டது. இதன்காரணமாக வாக்காளர்கள் சிறிது நேரம் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். வாக்குச்சாவடிகளில் கர்ப்பிணி பெண்கள், கைக் குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியோர்கள் விரைந்து வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதிக்கும் அ.தி.மு.கவினருக்கு இடையேயான மோதல், தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் அ.தி.மு.க எம்.பியுமான ரவீந்திரநாத் கார் கண்ணாடி உடைத்த சம்பவங்கள் நடந்தேறியது. சில வாக்குச்சாவடிகளில் அரசியல் கட்சிகள் எங்களுக்கு பணப்பாட்டுவாடா செய்யவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு சில இடங்களில் வாக்காளர்களின் வாக்குகளை மற்றவர்கள் பதிவு செய்த சம்பவங்கள் நடந்தன. இதனையடுத்து 49பி சட்டப்பிரிவை பயன்படுத்தி வாக்களித்து தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் நிறைவடைந்தது - வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்களித்தனர்
தேர்தல் நடக்கும் நேரத்தில் கடைசி ஒரு மணி நேரம் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பிபிஇ கிட் அணிந்து வாக்கு அளிக்க வகை செய்யப்பட்டது . கொரோனா நோயாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் தேர்தல் பணியாளர்களும் கவச உடை அணிந்திருந்தனர்.
தி.மு.க எம்.பி கனிமொழி சென்னை ஆர்.கே சாலையில் உள்ள வாக்குச் சாவடியில் கொரோனா கவச உடையணிந்து வாக்களித்தார். அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனனும் கொரோனா கவச உடையணிந்து வாக்களித்தார்.
மிகப்பெரிய ஜனநாயகத்திருவிழா அமைதியான முறையில் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இன்றி இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தோராயமாக 72 சதவிகித வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாகு, மொத்தம் 71.79% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்த நம்பர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறினார். அதிகப்பட்சமாக கள்ளக்குறிச்சி 78% நாமக்கல் 77.91% அரியலூர் 77.88% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக சென்னையில் 59.40%, செங்கல்பட்டு 62.77%, திருநெல்வேலி 65.16% வாக்குகள் பதிவாகி உள்ளது. இதில் சிறிய அளவில் மாற்றம் இருக்கலாம். அதுபற்றி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இன்று பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை. இதுபற்றி சிலர் தெரிவித்துள்ள புகார்கள் குறித்தும், அசம்பாவித சம்பவங்கள் குறித்தும் தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, புகார் தெரிவித்தால் மறுவாக்குப்பதிவு குறித்து விவரம் தெரியவரும்.
புகார் நிறைய வரவில்லை. மின்னணு இயந்திரம் எதுவும் எடுத்துச்சென்றதாக எந்த புகாரும் வரவில்லை. பறக்கும் படை, நிலை கண்காணிப்பு இன்று முதல் திரும்பப்பெறும். பணம் பறிமுதல் இனி இருக்காது. மின்னணு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நன்றாக இருந்தது. 1 சதவீதத்துடன் குறைந்த அளவே சிறிய அளவில் இயந்திரங்களில் பிரச்னை ஏற்பட்டது. அதுவும் உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காலத்திலும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். 72 சதவீதம் என்பது நல்ல வாக்குப்பதிவு தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
வாக்குப்பதிவு முடிந்த உடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படும்.