முருகன் வாக்கு பலிச்சுடுமோ.. தனித்து போட்டியிட்டு அதிர வைக்கும் பாஜக ஸ்கெட்ச்.. சூப்பர் பிளான்!
பாஜக தனித்து நின்று போட்டியிட வாய்ப்புள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
சென்னை: ஒருவேளை நிஜமாகவே பாஜக தனியா நின்னு போட்டியிடுமோ? முருகன் சொன்ன மாதிரி சும்மாவே 60 சீட்ல ஜெயிச்சுடுமோ? நடக்கிறதை எல்லாம் பார்த்தால் அப்படித்தான் தெரியுது.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கோவை மாநகர் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், "சட்டமன்றத் தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக இருக்கிறது" என்றார்.
இன்னும் ஒரு கட்சியும் இப்படி சொல்லாத நிலையில், தமிழக பாஜக அறிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.. அதுமட்டுமல்ல.. பாஜக ரெடியாயிருச்சோ என்ற சந்தேகத்தையும் வலுவாக்கி உள்ளது.
பாஜக
கடந்த சில தினங்களாகவே தேர்தலுக்கான கள வேலைகளில் அரசியல் கட்சிகள் மறைமுகமாக இறங்கி வருகின்றன.. ஆனால் பாஜக தரப்பு மட்டுமே வெளிப்படையாக தேர்தல் பற்றி பேசி வருகிறது.. இதற்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்ததே விபி துரைசாமிதான்.
விபி துரைசாமி
திராவிட பிம்பம் ஒன்று, பாஜகவின் நிழலாக முழுசா உருமாறி அன்று நின்றது.. செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணிதான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும்... பாஜவை எந்த கட்சி அனுசரித்து போகிறதோ அந்த கட்சியுடனே கூட்டணி அமைக்கப்படும்.. தமிழகத்தில் திமுக vs அதிமுக என இருந்த நிலை திமுக vs பாஜக என மாறி உள்ளது" என்று தில்லாக ஒரு சேலஞ்சை முன்வைத்தார் விபி துரைசாமி.
60 சீட்கள்
இதற்கு பிறகுதான் எல்.முருகன், 60 தொகுதிகளில் சும்மா நின்றாலே வெற்றி பெறுவோம் என்றார்.. சீட்டுகளை பெறுவதற்காக அதிமுகவுக்கு நூல் விடப்பட்டதாகவே இந்த பேச்சு கருதப்பட்டது.. ஆனால் அதிமுக இந்த 60 சீட் பற்றி வாயே திறக்கவில்லை.. எந்த கருத்தும் சொல்லவில்லை.. இருந்தாலும், அதிமுகவுடன்தான் கூட்டணி என்று பாஜக விடாமல் சொல்லி வருகிறது.
பாஜக
பாஜகவுடன் சரியான இணக்கமான போக்கு அதிமுகவுக்கு இல்லை.. இவர்களுடன் கூட்டு சேர்ந்ததால்தான மெஜாரிட்டியில் கடந்த முறை ஜெயிக்க முடியாமல் போய்விட்டது என்ற மனக்குமுறலும் அக்கட்சிக்கு உள்ளது.. இதை பாஜகவும் உணராமல் இல்லை.. அதனால அநேகமாக தனியாக நின்று தேர்தலை சந்திக்கவும் தயாராகி வருவதாக சொல்கிறார்கள்.
மூத்த தலைவர்கள்
இதற்கு காரணம், அக்கட்சியில் விபி துரைசாமி போன்ற மூத்த தலைகள் இணைந்துள்ளதுதான்.. இதுபோக குக.செல்வம் ஆல்ரெடி தஞ்சமடைந்துவிட்டதுபோலவே தெரிகிறது.. பகிரங்கமாக பாஜகவில் அவர் சேரவில்லை என்றாலும், அந்த கட்சி நடத்தும் கூட்டங்களுக்கு சென்று வந்து கொண்டுதான் இருக்கிறார்.. அதனால் திராவிட முகங்கள் பாஜகவில் நிறைய தென்பட்டு வருவது ஒரு புது தெம்பை அக்கட்சிக்கு தந்துள்ளது.
அண்ணாமலை
இதுபோக, அண்ணாமலை போன்ற திடீர் பிரமுகர்களை கட்சிக்குள் இழுத்து மிக மிக முக்கியமான பொறுப்பையும் தந்துள்ளது.. இதுகுறித்த சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை என்றாலும், விதிகளுக்கு உட்பட்டுதான் அண்ணாமலைக்கு பொறுப்பு தந்துள்ளோம் என்று பாஜக நியாயப்படுத்தி வருகிறது.. இது எல்லாவற்றையும்விட, நட்சத்திர பிரமுகர்களை உள்ளே இழுத்து போட்டு வருகிறது.. ஜீவஜோதி முதல் நமீதாவரை கவர்ச்சி விஐபி பிரமுகர்கள் அந்த கட்சியை ஆக்கிரமித்துள்ளனர்.. நேற்று வந்த காயத்ரி ரகுராமுக்குகூட பொறுப்பு தந்துள்ளனர்.
பிரதமர் கேர் நிதி
ஆக, பாஜக தனி அணி அமைக்கலாம் என்றே தெரிகிறது... பல கட்சி பிரபலங்களை இழுத்துக் கொண்டு வந்து அந்த பலத்தில் தேர்தலை சந்திக்கவும் வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது.. ஆனால் வெற்றி பெறுமா என்பது உறுதியாக தெரியவில்லை.. ஏனென்றால், மக்கள் நலனில் எந்த அளவுக்கு மாநில பாஜக கவனத்தை செலுத்தி உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது.. பிரதமர் கேர் நிதி, பேரிடர் நிதியில் இருந்து ஒரு ரூபாய் கூட வாங்கி தரும் முயற்சியில் தமிழக பாஜக இறங்கவில்லை.
தற்கொலைகள்
நீட் தேர்வுக்கு பிள்ளைகள் இங்கே தவித்து கிடக்கும்போது ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை... பிள்ளைகள் ஒரே நாளில் 3 பேர் இறந்துள்ளபோதும், நீட் தேர்வு சம்பந்தமான அழுத்தத்தையும் மத்திய அரசுக்கு எடுத்து சொல்லவில்லை. எந்த திட்டங்களும் நன்மைகளும் இதுவரை பெற்று தரவில்லை. எரிபொருள் சுங்ககட்டண உயர்வு மக்களை நெருக்கி தள்ளுகிறது.
ரவுடிகள்
இது எல்லாவற்றிற்கும் மேலாக அக்கட்சியல் அரிவாள், கத்தியுடன் ரவுடிகள் இணைந்து வருகிறார்கள்.. இதை கேட்டால் அவர்களை நல்வழிப்படுத்தி திருத்த போகிறோம் என பாஜக காரணம் சொல்கிறது.. இருக்கிற பிரச்சனை எல்லாம் விட்டுவிட்டு, இவர்களை திருத்தி கொண்டு உட்கார்ந்திருந்தால் போதுமா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
திமுகவின் வாக்கு வங்கி
ஆனால் ஒன்று, தெளிவான தொகுதிகள் பங்கீடும், நேர்மையான வாக்குறுதியும் பாஜகவின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும்.. ஆனால் ஒன்று, தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு கூடியுள்ளது கட்டாயம் ஒப்புக்கொள்ள வேண்டியதுதான் என்றாலும், அந்த ஆதரவு எத்தனை இடங்களை வெல்வதற்கு உதவும் என்று இப்போதே கூறமுடியாது... ஆனால் திமுகவின் வாக்கு வங்கியை அசைத்து பார்க்க முடியும்.
முருகன் வாக்கு
ஒருவேளை ரஜினி கட்சி தொடங்கி அவருடனும், பாமக, விசிக புதிய தமிழகம், சரத்குமார் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் கண்டிப்பாக ஓரளவு வெற்றியையும் பெறலாம் என்ற கருத்தும் பரவலாக உள்ளது. இருந்தாலும் சும்மாவே நின்னாலும் 60 சீட் ஜெயிப்போம் என்பதை எல்லாம் ஏற்க முடியாது.. கனவு காணுங்க தப்பில்ல... அதுக்காக ஏக்கர் கணக்குல கனவு காண கூடாது என்பதைதான் சொல்ல வேண்டி உள்ளது.