தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் எப்போது? முக்கிய அப்டேட் கொடுத்த.. இந்திய தேர்தல் ஆணையம்!
சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. ஆனால், தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது குறித்த அப்டேட் தற்போது வெளியாகியிருக்கிறது.
தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் முழு வேகத்தில் ரெடியாகி வருகின்றன. ஒருபுறம் என்டிஏ கூட்டணி, மறுபுறம் இந்தியா கூட்டணி என அரசியல் கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன.

கூட்டத்திற்கு அழைப்பு
இப்படி இருக்கையில், தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது பிப்.4 மற்றும் 5ம் தேதிகளில் தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசணையை மேற்கொள்கிறது. இதில் பங்கேற்க தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் பாண்டிச்சேரி என தேர்தல் நடைபெற உள்ள 5 மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. மத்திய மேற்பார்வையாளர்களாக உள்ள ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 5 மாநிலங்களின் உள்துறை செயலாளர்கள் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
அதிகாரப்பூர்வ கூட்டம்
இந்த கூட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு விவாதிக்கப்படும். பொதுவாக தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில வாரங்கள் அல்லது மாதங்களுக்கு முன்பாக, சம்பந்தப்பட்ட மாநிலங்களில் நிர்வாக மற்றும் பாதுகாப்பு தயார் நிலையை உறுதி செய்வதற்காக.. இந்த அதிகாரப்பூர்வ கூட்டம் நடத்தப்படும்.
இந்த கூட்டத்தில் மாநிலங்களின் தற்போதைய பாதுகாப்பு சூழல் எப்படி இருக்கிறது? என்பதை உள்துறை செயலாளர்கள் மூலம், தேர்தல் ஆணையம் அறிந்து கொள்ளும். அதேபோல மாநிலங்களுக்கு அனுப்பப்பட உள்ள மத்திய பார்வையாளர்கள், அவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய பகுதிகள் குறித்து அறிவுறுத்தப்படும்.
தேர்தலுக்கு பாதுகாப்பு
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு, எத்தனை கம்பெனி மத்திய ஆயுத காவல் படைகள் தேவை என்பது குறித்து.. உள்துறைச் செயலாளர்களுடன் ஆலோசிக்கப்படும். அதேபோல, பதட்டமான வாக்குச்சாவடிகள், வன்முறை நடக்கக் கொள்ள இடங்களை கண்டறிந்து, அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிப்பது குறித்தும் விரிவாக பேசப்படும்.
இது தவிர உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அரசிடம் ஒப்படைப்பது, மற்றும் பழைய குற்றவாளிகள் மீது தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்படும்.
ஓட்டு இயந்திரங்கள் சரிபார்ப்பு
நிர்வாக அளவில் தயார் நிலை குறித்தும், இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலின் நிலை மற்றும் அதில் ஏதேனும் புகார் உள்ளனவா? என்பது குறித்து விவாதிக்கப்படும். EVM மற்றும் VVPAT இயந்திரங்களின் முதல் கட்ட சரி பார்ப்பு மற்றும் பாதுகாப்பு பற்றி அதிகாரிகளிடம் கேட்கப்படும்.
இது தவிர வாக்காளர்களுக்கு பணம் அல்லது மது விநியோகம் செய்வதை தடுக்க, எடுக்கப்பட வேண்டிய கடுமையான நடவடிக்கைகள் குறித்து, ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும். மேலும் மாநில எல்லைகளில் சோதனை சாவடிகளை அமைத்து கண்காணிப்பது குறித்தும் திட்டமிடப்படும்.
காவல்துறை பாதுகாப்பு
தேர்தலில் மத்திய பார்வையாளர்களாக உள்ள ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள், தேர்தல் ஆணையத்திற்கு கண் மற்றும் காதுகளாக செயல்படுபவர்கள். இவர்கள் களத்தை ஆய்வு செய்து, நேரடியாக ஆணையத்துக்கு தெரிவிப்பார்கள். இதுவே அவர்களின் பிரதான பணி. அதேபோல உள்துறை செயலாளர்கள் மாநிலத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் காவல்துறைக்கு முழு பொறுப்பு. எனவே இவர்களது அறிக்கை முக்கியமானது. இதெல்லாம் இந்த கூட்டத்தில் பேசப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications