காவிரி விவகாரம்.. பாஜக வெளிநடப்பு! முதல்வரின் தனித் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்!
சென்னை: தமிழ்நாடு சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று தமிழ்நாடு சட்டசபை கூடியது. இதில் காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.
காவிரி நீர் பங்கீடு என்பது தமிழ்நாடு- கர்நாடகா இடையே தொடர்ந்து பிரச்சினையாக இருக்கிறது. தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய நீரைத் தராமல் கர்நாடகா தொடர்ந்து பிரச்சினை செய்து வருகிறது.

இந்தாண்டும் கூட இதே பிரச்சினை தான் தொடர்கிறது. தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தரக் கூடாது என்று இரண்டு முறை பந்த் எல்லாம் கூட கர்நாடகா நடத்தியுள்ளது.
இந்தச் சூழலில் தான் இன்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் தமிழ்நாடு சட்டசபை கூடியது. இந்தச் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியதும் மறைந்த கேரள முதல்வர் உம்மன்சாண்டி, வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன், முன்னாள் எம்எல்ஏக்கள் லியாவுதீன் சேட், பழனியம்மாள், ஆண்டமுத்து ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் தமிழ்நாடு சட்டசபை கூடியது. இதில் காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இது தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. இந்த தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்ற போது பாஜக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாகப் பேசினார். அப்போது ஆளும் தரப்புக்கும் எடப்பாடிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இருப்பினும், கடைசியில் தீர்மானத்தை ஆதரிப்பதாகவே எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதையடுத்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.












Click it and Unblock the Notifications