"வருங்கால துணை முதல்வரே" ஒரு நிமிடம் பதறிப்போன நயினார் நாகேந்திரன்.. நிர்வாகிகளை அழைத்து வார்னிங்!
அரியலூர்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை வருங்கால துணை முதல்வரே என்று வரவேற்ற போது, அவர் பதறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன்பின் அரியலூர் மாவட்டத் தலைவரை அழைத்து துணை முதல்வர் என்றெல்லாம் பேசக் கூடாது என்றும் நயினார் நாகேந்திரன் வார்னிங் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த நாளில் இருந்தே பாஜக கூட்டணி ஆட்சி என்று பேசி வருகிறது. சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால், பாஜகவும் அமைச்சரவையும் இடம்பெறும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறி வருகிறார். இதனையே பாஜக தலைவர்களும் கூறி வருகின்றனர். ஆனால் அதிமுக தரப்பில் ஆட்சியில் பங்கு கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார்.

இதனால் அதிமுக - பாஜக இடையிலான கூட்டணியில் குழப்பம் நீடித்து வருவதாக பார்க்கப்படுகிறது. இதனிடையே பாஜகவினர் தரப்பில் சோசியல் மீடியாவில், தேர்தலில் வென்றால் துணை முதல்வர் பதவியில் பாஜக மாநில தலைவர் வருவார் என்று அக்கட்சியினர் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் அண்ணாமலை தரப்பும் அமைச்சரவையும் இடம் பெறுவோம் என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வரவுள்ளார். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழாவை இந்த ஆண்டு சிறப்பாக நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. அதன்படி ஜூலை 23 முதல் 27 வரை 5 நாட்கள் விழாவாகக் கொண்டாடப்படவுள்ளது.
இதில் கடைசி நாளான ஜூலை 27ஆம் தேதி நடக்கவுள்ள திருவாசகம் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். இதன் காரணமாகப் பிரதமர் மோடியை வரவேற்பதற்கான ஆலோசனைக் கூட்டம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்றது.
இதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மாவட்ட பாஜக தரப்பில் நயினார் நாகேந்திரனை வரவேற்ற போது, வருங்கால துணை முதல்வரே என்று கூறினார்கள். இதனால் பதறிய நயினார் நாகேந்திரன், துணை முதல்வரே என்றெல்லாம் சொல்ல கூடாது என மாவட்டத் தலைவர் பரமேஸ்வரிக்கு அறிவுறுத்தினார்.
இந்த வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக நயினார் நாகேந்திரனிடம், பாஜக நிர்வாகி ஒருவர், சோறு கூட போடுகிறோம்.. ஆனால் ஓட்டு போட மாட்டோம் என்று மக்கள் சொல்வதாகக் கூறினார். அப்போதும் நயினார் நாகேந்திரன் பதறியடித்து இப்படியெல்லாம் பேசக் கூடாது என்று கூறினார்.
இதனால் கட்சி நிகழ்ச்சிகளில் நயினார் நாகேந்திரனைப் பதற வைப்பதிலேயே அக்கட்சியினர் குறியாக இருப்பதாகக் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் நயினார் நாகேந்திரன் பேசும் போது கூட, கட்சி நிர்வாகிகளுக்குத் தொலைப்பேசியில் கொண்டால், வணக்கம் கூட சொல்வது கிடையாது. நயினார் நாகேந்திரன் பேசுகிறேன் என்று சொன்னால், நயினாவா என்கிறார்கள் என்று சோகத்தைப் பகிர்ந்திருந்தார்.












Click it and Unblock the Notifications