தமிழக பாஜகவில் 7 பேர் கொண்ட குழு அமைத்த அண்ணாமலை.. அம்பேத்கர் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட பிளான்!
சென்னை: அம்பேத்கர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக 7 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார் அண்ணாமலை.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நவீன இந்தியாவின் சிற்பி, அரசமைப்பின் தந்தை என அனைவராலும் போற்றப்படும் அம்பேத்கரின் பிறந்தநாள், ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அம்பேத்கருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர் தொடர்பான 5 இடங்களை மேம்படுத்தியவர் நமது பிரதமர் நரேந்திர மோடி என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், தமிழக பாஜக சார்பில் அம்பேத்கர் ஜெயந்தியை விமரிசையாக கொண்டாடும் விதமாக மாநில பொதுச் செயலாளர் பி.கார்த்தியாயினி தலைமையில் குழு அமைக்கப்பட்டுளளது. இதில், செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், மகளிரணி பொதுச்செயலாளர் கே.நெல்லையம்மாள் உள்ளிட்ட 7 பேர் இடம்பெற்றுள்ளனர். ஏப்ரல் 14 தொடங்கி ஏப்.25 ஆம் தேதி வரை அம்பேத்கர் ஜெயந்தி தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெறும்." எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பின் தந்தை என போற்றப்படும் டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர், 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி பிறந்தார்.அவருடைய பிறந்த நாள் "அம்பேத்கர் ஜெயந்தி" என அழைக்கப்பட்டு ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
அம்பேத்கர், சமூகத்திற்கும் அரசிலையமைப்பிற்கும் ஆற்றிய பங்களிப்பிற்காக, அவரது பிறந்தநாளான ஏப்ரல் 14 ஆம் தேதியை பொது விடுமுறை நாளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு முதல், அம்பேத்கர் பிறந்த நாளை "சமத்துவ நாள்" என அங்கீகரித்து, அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் சமத்துவ நாள் உறுதிமொழி ஆண்டுதோறும் ஏற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications