தமிழ்நாடு அமைச்சரவை அதிரடி மாற்றம்.. செந்தில் பாலாஜி உள்பட புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு!
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றப்பட்டு உள்ளது. செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டவர்கள் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்று உள்ளனர். புதிய அமைச்சர்கள் சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரவி முன் பதவி ஏற்று உள்ளனர்.
சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில் 116 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அழைப்பிதழ் இருந்தவர்கள் மட்டுமே விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர் முன்னாள் முதல்வர்கள் இபிஎஸ், ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. புதியதாக பொறுப்பேற்கும் அமைச்சர்கள் குடும்பத்தினர் தலா 10 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்று அமைச்சரவை மாற்றம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்என் ரவியிடம் ஒப்புதல் கோரி கடிதம் எழுதப்பட்டது. இந்த கடிதத்துக்கு ஆளுநர் ஆர்என் ரவி நேற்று இரவில் ஒப்புதல் வழங்கி உள்ளார். இந்த கடிதம் வெளியிடப்பட்டு உள்ளது.

அமைச்சரை மாற்றத்திற்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்று உள்ளார். அரசு அறிவிப்பின் மூலம் அவர் துணை முதல்வராக பதவிபெற்றுள்ளார். இது போக 4 பேர் புதிதாக அமைச்சரவையில் இணைக்கப்பட்டு உள்ளனர்.
அமைச்சர் பொன்முடி வனத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட உள்ளார். அமைச்சர் மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட உள்ளார். அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட உள்ளார்.
தங்கம் தென்னரசு நிதித்துறையுடன், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட உள்ளார். அமைச்சர் ராஜகண்ணப்பன் காதி மற்றும் பால்வளத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட உள்ளார்.
அமைச்சர் மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறை ஒதுக்கீடு அமைச்சராக நியமனம் செய்யப்பட உள்ளார்.
என்ன துறைகள்: செந்தில் பாலாஜி உட்பட 4 பேருக்கும் எந்த இலாகாக்கள் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. செந்தில் பாலாஜி உள்பட 4 பேர் நாளை அமைச்சராக சேர்க்கப்படும் நிலையில் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே ராமச்சந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செந்தில் பாலாஜி வருகை: மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் சமீபத்தில்தான் வழங்கப்பட்டது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்கு பின் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றம் அவர் அமைச்சராவதற்கு எந்த விதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. இதனால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படுகிறது.
செந்தில் பாலாஜி வெளியே வந்ததும் அமைச்சரவை மாற்றம் வைத்துக் கொள்ளலாம் என்று ஸ்டாலின் சமீபகாலமாக சொல்லி வந்தார். அவரது ரிலீசுக்காகத்தான் அமைச்சரவை மாற்றமும், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி உயர்வும் தள்ளிப்போனது.
செந்தில் பாலாஜி வரட்டும். அதற்கு ஏற்றபடி அமைச்சரவை மாற்றங்களை செய்யலாம் என்று தாமதம் செய்ததாக கூறப்பட்டது. செந்தில் பாலாஜி நம்பிக்கைக்குரிய நபர். அதனால் அவருக்கான வாய்ப்பை ஸ்டாலின் மறுக்க மாட்டார். அவர் வருகைக்காகவே ஸ்டாலின் காத்து இருக்கிறார் என்று கூறப்பட்டது.
தற்போது, செந்தில் பாலாஜி வெளியே வந்திருப்பதால் கேபினெட் மாற்றம் நடக்கப்போகிறது. இன்று மாலை அமைச்சரவை மாற்றத்தின் போது செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டவர்கள் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்று உள்ளனர்












Click it and Unblock the Notifications