மேற்கு வங்கத்தில் சட்டசபை முடக்கம்.. "மரபுக்கு எதிரானது.." முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு
சென்னை : மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை முடக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் மேற்கு வங்க ஆளுநரின் செயல் மரபுகளுக்கும் விதிகளுக்குப் புறம்பானது என கூறியுள்ளார்.
மேற்குவங்க மாநில அரசின் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.
அரசின் பல்வேறு திட்டங்களுக்கு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக மம்தா பானர்ஜி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்.
உன் கையை காட்டு! கு.க.செல்வத்திடம் உரிமையுடன் பேசிய முதல்வர் ஸ்டாலின்! அறிவாலயத்தில் நடந்தது என்ன?
அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல்
மாநில மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என மம்தா பானர்ஜி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மேலும் ஆளுநருக்கு எதிராக தொடர்ந்து மம்தா பானர்ஜி பல்வேறு குற்றச்சாட்டுகளைளையும் சுமத்தினார். வரவிருந்த மேற்கு வங்க சட்டசபை கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவது குறித்து பரிசீலித்து வருவதாக அம்மாநில சட்ட மன்ற விவகார துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி கூறியிருந்தார்.
சட்டசபை முடக்கம்
மேற்கு வங்க அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு முற்றிய நிலையில் திடீர் திருப்பமாக ஆளுநர் தன்கர் மேற்கு வங்க சட்டமன்றத்தை திடீரென முடக்கினார் அரசியல் நிர்ணய சட்ட பிரிவு 174 அடிப்படையில் மேற்கு வங்க சட்டப்பேரவை பிப்ரவரி 12 முதல் காலவரையின்றி வருவதாக அறிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அரசியலமைப்பின் 174 வது பிரிவின் (2) உட்பிரிவின் (a) உட்பிரிவின் மூலம் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநரான ஜக்தீப் தன்கர், மேற்கு வங்காள சட்டமன்றத்தை இதிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் ஒத்திவைக்கிறேன். 12 பிப்ரவரி, 2022." என கூறியிருந்தார்.
ஆளுநருக்கு கண்டனம்
மேற்குவங்க ஆளுநரின் இந்த செயலுக்கு தொடர்ந்து இந்திய அளவில் கடும் கண்டனமும் எதிர்ப்பும் எழுந்துவரும் நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதற்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்தன. இந்நிலையில் தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி மேற்கு வங்க சட்டசபை முடக்கப்பட்டது போல தமிழகத்திலும் சட்டமன்றத்தை முடக்க நேரிடும் எனக் கூறினார்.
முதல்வர் ஸ்டாலின்
இந்த நிலையில் மேற்குவங்க சட்டப்பேரவையை முடக்கிய ஆளுநர் செயலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்," மேற்கு வங்காள ஆளுநரின் சட்டமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்த செயல், உயர்ந்த பதவியில் இருந்து எதிர்பார்க்கப்படும் எந்த உரிமையும் இல்லாமல், நிறுவப்பட்ட விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது. அரசமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்த மாநிலத்தின் 'குறியீட்டு' தலைவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில்தான் ஜனநாயகத்தின் அழகு இருக்கிறது.", என பதிவிட்டுள்ளார்.