ராஜ்யசபா சபை குறிப்பில் "பெரியார்" நீக்கம்- கருத்துரிமையின் கழுத்து நெரிப்பு: ஸ்டாலின் கடும் கண்டனம்
சென்னை: ராஜ்யசபா சபை குறிப்பில் தந்தை பெரியார் பெயரை நீக்குவதாக அறிவித்துள்ளது கருத்துரிமையின் கழுத்து நெரிப்பு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் மறுவரையறை 2019- திருத்த மசோதாவை இன்று தாக்கல் செய்தார். ஜம்மு காஷ்மீரில் சட்டசபை இடங்களை அதிகரிப்பது, எஸ்சி, எஸ்டி பிரதிநிதித்துவம் உள்ளிட்டவை இம்மசோதாவில் இடம் பெற்றிருந்தன. முன்னதாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு தெரிவித்திருந்தது.

அப்போது, திமுக எம்பி எம்.எம். அப்துல்லா, நமது முன்னோர்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும். ஜம்மு காஷ்மீர் மகாராஜா ஹரிசிங்குக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற முன்னோர்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி இருக்க வேண்டும். வல்லபாய் பட்டேலுக்கு பிரம்மாண்ட சிலை வைப்பதை விட அவரது வாக்குறுதிகளை காப்பாற்றுவதுதான் மிக முக்கியமானது என 370-வது பிரிவு நீக்கத்துக்கு எதிரான குரலை பதிவு செய்தார். அப்போது தந்தை பெரியாரின் மேற்கோளை அப்துல்லா சுட்டிக்காட்டியது சபை குறிப்பில் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டது.
மாநிலங்களவையில் @arivalayam எம்.பி., @pudugaiabdulla உரையாற்றும்போது சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்; பெரியாரின் பெயரும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
— M.K.Stalin (@mkstalin) December 11, 2023
நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து… pic.twitter.com/M59rrCinbY
இதற்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மாநிலங்களவையில் திமுக எம்பி எம்.எம். அப்துல்லா, உரையாற்றும்போது சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்; பெரியாரின் பெயரும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது!
மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல்படுத்தியபோது தந்தை பெரியார்தான் இதற்குக் காரணம் என்று பிரதமர் வி.பி.சிங் பேசிய நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவமானம்!
மக்களின் மனங்களில் நிலைத்து நின்று, வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் தந்தை பெரியாரின் பெயரை எங்கும் - எப்போதும் - எந்தச் சூழலிலும் பயன்படுத்துவோம்! அனைவரும் பயன்படுத்துங்கள்! இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications