பீகாரில் மோடி ஒரு வார்த்தை சொல்லல?ராகுலின் வாக்காளர் உரிமை யாத்திரையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் கமிஷன் மீது முக்கியமான குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார்.. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பல தொகுதிகளில் முறைகேடு நடந்ததாகவும் கூறி, இதற்கு எதிரான போராட்டத்தையும் கையில் எடுத்துள்ளார்.. அதன் ஒரு பகுதியாக, வாக்காளர் உரிமை யாத்திரை என்று பெயரில் பீகாரில் துவங்கியிருக்கிறார்.. இந்த யாத்திரையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி, தேர்தல் கமிஷன் பாஜகவுடன் சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

முறைகேடுகள் - குற்றச்சாட்டுகள்
முக்கியமாக, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பல தொகுதிகளில் முறைகேடு நடந்ததாக கூறி பெங்களூரு மத்திய தொகுதியில் நடந்த முறைகேடு குறித்த தரவுகளையும் வெளியிட்டிருந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதனிடையே, சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி வரும் பீகாரில் தேர்தல் கமிஷன் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள்..
ராகுல் காந்தி கண்டனம்
இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்த ராகுல் காந்தி, 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதற்கு எதிராக தீவிர போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளார். தேர்தல் கமிஷன் மீது முக்கியமான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
அதன் ஒரு பகுதியாக பீகாரில் யாத்திரை செல்ல திட்டமிட்டு இருந்தார். "வாக்காளர் உரிமை யாயாத்திரை" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரை பீகாரின் சசாரம் என்ற இடத்தில் ஆரம்பமானது.. ராகுல் காந்தியுடன் மல்லிகார்ஜுன கார்கே, லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் போன்ற தலைவர்களும் இந்த யாத்திரையில் பங்கேற்றுள்ளனர்.
மோடி சொல்லலையே
நேற்றுகூட ராகுல்காந்தி பேசும்போது, பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் என்பது பிரதமர் மோடி, பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் உங்கள் வாக்குகளைத் திருட மேற்கொண்ட முயற்சி. அவர்கள் உங்கள் வாக்குரிமையைப் பறிக்க தங்களால் இயன்றவரை முயற்சி செய்கிறார்கள். பிரதமர் மோடி பீகார் வந்திருந்தார். ஆனால் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்குகளைத் திருட தனது அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி குறித்து அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
இந்த விவகாரத்தில் மோடி ஏன் மவுனம் காக்கிறார் என்பது தெரியவில்லை. வாக்கு திருட்டு என்பது இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதல். பீகார் மக்களின் வாக்குரிமையை பாஜ திருட இந்தியா கூட்டணி அனுமதிக்காது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தால் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் ஏழைகளுக்கு எதிரானவை. மேலும் அது இளைஞர்களுக்கான அனைத்து வேலைவாய்ப்புகளையும் மூடிவிட்டது என்று குற்றஞ்சாட்டினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின்
இந்நிலையில், ராகுல்மேற்கொண்டுவரும் இந்த யாத்திரையில் தமிழக முதலமைச்சரும் பங்கேற்ப போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது..
வருகிற 26, 27-ந்தேதிகளில் பிரியங்காவும், 27-ந்தேதியும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், 29-ந்தேதி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
யாத்திரை ராகுல்காந்தி
இதேபோல் உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், முதலமைச்சர்கள் ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட்), ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா) சுக்விந்தர் சுகு (இமாசலப்பிரதேசம்) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்
வாக்கு திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி யாத்திரை தொடங்கியுள்ள நிலையில் மாநில முதல்வர்களும் பங்கேற்ற முடிவாகியிருப்பது, தேர்தல் நெருங்கும் சமயத்தில் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.












Click it and Unblock the Notifications