மேட்டூர் அணையில் இருந்து 12,000 கன அடி நீர் திறப்பு! காவிரி டெல்டா நோக்கி சீறிப் பாய்ந்த காவிரி ஆறு!
சென்னை: மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரி டெல்டாவின் குறுவை சாகுபடி மற்றும் ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு மேட்டூர் அணை நீரை திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேரு மேட்டூர் அணை நீரை திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக நீர் திறக்கப்பட இருப்பதால் கரையோர பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110 அடியை நெருங்கி வரும் நிலையில் காவிரி டெல்டா பாசனத்துக்காக நீர் திறப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். ஈரோடு, கரூர், சேலம், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கர்நாடகா நீர் திறப்பு: கர்நாடகாவில் ஒரு மாதமாக தென்மேற்கு பருவழை அதிதீவிரமாக பெய்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காவிரியின் குறுக்கே கர்நாடகா கட்டிய கிருஷ்ணராஜ சாகர் எனும் கேஆர்எஸ் அணை நிரம்பிவிட்டது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 1.60 லட்சம் கன அடிநீர் காவிரியில் திறந்துவிடப்படுகிறது.
4 நாட்களில் 21 அடி உயர்வு: இதனால் தமிழ்நாட்டுக்கான காவிரி நீர் வரத்தும் அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் 1.50 லட்சம் கன அடிநீர் பாய்கிறது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1.45 லட்சம் கன அடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 103 அடியாக இருந்தது. இன்று காலை 107 அடியாகவும் சற்று முன்னர் 109 அடியை தாண்டியும் மேட்டூர் அணை நிரம்பி வருகிறது. மேட்டூர் அணையானது கடந்த 4 நாட்களில் மட்டும் 21 அடி உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணை நீர் இருப்பு: தற்போதைய நிலையில் மேட்டூர் அணையில் நீர் இருப்பு 77 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 1,000 கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக நீரை திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
முதல்வர் ஆலோசனைக் கூட்டம்: இதனையடுத்து மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்துவிடுவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். ஈரோடு, சேலம், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேட்டூர் அணை நீரை திறக்க உத்தரவு: இந்த ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று பிற்பகல் 3 மணிக்கு தண்ணீர் திறக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
ஆடிப் பெருக்கு: குறுவை பயிர் சாகுபடிக்காகவும், ஆடிப்பெருக்கு விழாவை விவசாயப் பெருமக்கள் கொண்டாடுவதற்காகவும் மேட்டூர் அணை திறக்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள 13 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 5,339 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்பட்டு கடைமடை வரை நீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்: இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில், ன்றைய மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், ஆடிப்பெருக்கு விழாவிற்காக ஆற்றங்கரைகளில் மக்கள் கூடும் இடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், வசாய சங்கப் பிரதிநிதிகளுடன் சிறப்பு ஆலோசனைக் கூட்டங்கள், றந்து விடப்படும் நீரைச் சேமித்தல் மற்றும் பயன்படுத்துதல், திக அளவு நீர் வெளியேற்றப்படும் வாய்ப்புள்ளதால் கரையோரங்களில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணை நீர் திறப்பு: இதனையடுத்து இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேரு மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்துவிட்டார். காவிரி டெல்டாவை நோக்கி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் சீறிப் பாய்ந்தபடி வெளியேறி வருகிறது.












Click it and Unblock the Notifications