முட்டாள்தனம்! சங்பரிவாரங்களை முப்படைகளுக்குள் புகுத்தும் அக்னிபத்? அனல் காட்டிய கே.எஸ்.அழகிரி!
சென்னை : முப்படைகளுக்கும் 46 ஆயிரம் படை வீரர்களைத் தேர்வு செய்யும் அக்னி பாதை என்ற திட்டத்தை மோடி தலைமையிலான பாஜக அரசு அறிவித்துள்ளது சங்பரிவாரங்களை முப்படைகளுக்குள் புகுத்தும் நடவடிக்கையோ என்ற சந்தேகம் இயல்பாக எழுகிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," முப்படைகளுக்கும் 46 ஆயிரம் படை வீரர்களைத் தேர்வு செய்யும் அக்னி பாதை என்ற திட்டத்தை மோடி தலைமையிலான பாஜக அரசு அறிவித்துள்ளது.
வேலையின்மை, உறுதியற்ற தன்மை, கேள்விக்குறியான எதிர்காலம் என்ற கவலையில் இருக்கும் இந்திய இளைஞர்களுக்கு இந்த அறிவிப்பு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. முப்படைகளின் நீண்ட கால மரபுகள் மற்றும் நெறிமுறைகளைத் தகர்க்கும் அக்னி பாதை திட்டம் ஆபத்தானது.

அக்னிபாத் திட்டம்
இந்தத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் வீரர்களுக்கு எதிர்காலம் குறித்த உத்தரவாதம் இல்லை. இந்த அச்சத்தின் காரணமாகத் தான் உத்தரப் பிரதேசம், பிஹார் உள்ளிட்ட பல மாநிலங்களில் இளைஞர்கள் வெகுண்டெழுந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். முப்படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகளும் அக்னி பாதை திட்டத்தை முற்றிலும் எதிர்த்துள்ளனர். அக்னி பாதை திட்டம் என்பது சங்பரிவாரங்களை முப்படைகளுக்குள் புகுத்தும் நடவடிக்கையோ என்ற சந்தேகம் இயல்பாக எழுகிறது.

கேள்விகளை எழுப்புகிறது
அக்னி பாதை திட்டத்தில் 17 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்களை மட்டுமே சேர்ப்பது பல கேள்விகளை எழுப்புகிறது. இதனால், பாதுகாப்புப் படையில் பணியாற்றும் வாய்ப்பை நமது இளைஞர்களில் பெரும்பாலானோர் இழந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. குறைவான பயிற்சி, குறைவான பணிக்காலம் என்பது, தரம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் இந்த திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். பெரிய தொகையில் கவனம் செலுத்தாமல், சிறிய தொகையில் கவனம் செலுத்துவது முட்டாள்தனமாகும்.

மோசமான விளைவு வரும்
அவசரக் கோலத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பால் ஏற்படும் மோசமான விளைவுகளைப் பற்றி நாட்டுக்கு எச்சரிப்பது நமது கடமை. எனவே, அக்னி பாதை திட்டத்தை ஒத்திவைத்துவிட்டு, பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற முப்படை அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும். தரம், செயல் திறன் மற்றும் பொருளாதாரம் ஆகிய 3 விஷயங்களில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் புதிய திட்டத்தை வகுக்க வேண்டும்.

நாடே தீப்பற்றி எரிகிறது
அக்னி பாதை திட்டத்தினால் நாடே தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 300-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ரயில் பெட்டிகள் எரிக்கப்பட்டு சொத்துகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன.பணமதிப்பிழப்பு நடவடிக்கை முதல் பொது முடக்க அறிவிப்பு வரை 'எடுத்தேன், கவிழ்த்தேன்...' என்று மோடி அரசு செயல்பட்டதால், கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

விளைவுகள் மோசமாக இருக்கும்
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி அவர்களது எதிர்காலத்தை உறுதி செய்யாமல், தொடர்ந்து அவர்களுக்கு எதிரான தாக்குதலில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதையே அக்னிபாத் திட்டம் வெளிப்படுத்துகிறது. இளைஞர்கள் தேன்கூடு போன்றவர்கள். அவர்கள் எதிர்காலத்தின் மீது நீங்கள் தொடர்ந்து கல் எறிந்தால், அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications